×

கர்நாடகாவில் கூடுதலாக 3 துணை முதல்வர்கள் கட்சி மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம்: முதல்வர் சித்தராமையா கருத்து

பெங்களூரு: கர்நாடகாவில் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த 3 துணை முதல்வர்கள் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜண்ணா கருத்து கூறியிருந்த நிலையில், இதுதொடர்பாக கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும் என்றும் கட்சி மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம் என்றும் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடக அமைச்சரவையில் கூடுதலாக 3 துணை முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.என்.ராஜண்ணா பேசியது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதுதொடர்பாக நேற்று கலபுர்கியில் பேசிய முதல்வர் சித்தராமையா, ’அமைச்சர் ராஜண்ணா அவரது கருத்தை கூறியிருக்கிறார். ஆனால் கட்சி மேலிடம் தான் இதுதொடர்பாக முடிவெடுக்க வேண்டும். ஒரு துணை முதல்வர் போதும் என்று கட்சி மேலிடம் நினைத்ததால் தான் ஒரு துணை முதல்வர் மட்டும் நியமிக்கப்பட்டார். கூடுதலாக 3 துணை முதல்வர்களை நியமிப்பது தொடர்பாக கட்சி மேலிடத்திடம் பேசுவதாக ராஜண்ணா கூறியிருக்கிறார். அவர் பேசட்டும். இந்த விவகாரத்தில் நான் சொல்வதற்கு எதுவுமில்லை. கட்சி மேலிடம் தான் இறுதி முடிவை எடுக்கும். மேலிடம் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட்டு நடப்போம்’ என்றார்.

இது குறித்து பேசிய அமைச்சர் ஜி.பரமேஸ்வர், ’கூடுதல் துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்று ராஜண்ணா கூறியதில் எந்த தவறும் இல்லை. மக்களவை தேர்தல் வருகிறது. அனைத்து சமூக மக்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ராஜண்ணா இந்த கருத்தை கூறியிருக்கிறார். ஆனால் அதை செயல்படுத்துவதும், செயல்படுத்தாததும் கட்சி மேலிடத்தின் முடிவு’ என்றார்.

The post கர்நாடகாவில் கூடுதலாக 3 துணை முதல்வர்கள் கட்சி மேலிட முடிவுக்கு கட்டுப்படுவோம்: முதல்வர் சித்தராமையா கருத்து appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Bengaluru ,Minister ,Rajanna ,Chief Ministers ,Dinakaran ,
× RELATED பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில்...