×

காவிரியில் தண்ணீர் திறக்க கோரி ஒன்றிய அமைச்சரிடம் அனைத்து கட்சி எம்பிக்கள் மனு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு வேண்டிய நீரை தர வலியுறுத்தி அனைத்து கட்சி எம்.பி.,க்களுடன் ஒன்றிய அமைச்சரிடம் மனு அளிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி நதிநீர் பிரச்னையில் நீண்டகால சட்டப் போராட்டத்திற்கு பிறகு, ஒரு சராசரி ஆண்டில் பில்லிகுண்டுலுவில் கர்நாடகா வழங்க வேண்டிய மாதாந்திர நீர் அளவின் கால அட்டவணை, உச்ச நீதிமன்றத்தின் கடந்த 2018ம் ஆண்டு பிப்.16ம் தேதியிட்ட தீர்ப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் கடந்த 2007ம் ஆண்டு பிப்.5ம் தேதியிட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மற்றும் 2018ம் ஆண்டு பிப்.16ம் தேதியிட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, பற்றாக்குறை ஆண்டில், அதற்கேற்ற விகிதாச்சார அடிப்படையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே நீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும். அதன்படி இந்தாண்டு செப்.14ம் தேதி அளிக்கப்பட வேண்டிய 103.5 டி.எம்.சியில் 38.4 டி.எம்.சி. மட்டுமே கிடைத்துள்ளது. இது 65.1 டி.எம்.சி குறைவாகும். அதேபோல, மேட்டூர் நீர்த்தேக்கத்தின் 69.25 டி.எம்.சி. நீர் இருப்பு, இந்திய வானிலை ஆய்வுத்துறையின் இயல்பான மழைப்பொழிவு அறிக்கை மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் பெறப்பட வேண்டிய நீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, குறுவை பயிரிடுவதற்கும், சம்பா பயிர்களுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குவதற்கும் ஏதுவாக, கடந்த ஜூன் 12ம் தேதி நீர் திறக்கப்பட்டது.

மேலும், கர்நாடக அரசு, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய பங்கை, விகிதாச்சாரப்படி கூட விடுவிக்காததாலும், உச்ச நீதிமன்ற ஆணையின்படி ஏற்படுத்தப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றால் இதற்கு தீர்வு காண முடியாததாலும், தமிழ்நாடு அரசு கடந்த ஆக.14ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழ்நாட்டின் கோரிக்கை நியாயமற்றது என்றும், தமிழ்நாடு தனது ஆயக்கட்டை அதிகப்படுத்தி உள்ளது என்றும் ஆதாரமற்ற அறிக்கைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், கர்நாடக அரசு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சருக்கு கடந்த செப்.13ம் தேதி எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டிற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில் போதுமான மழை கிடைக்கும் எனவும், காவிரி டெல்டாவில் தேவையான அளவு நிலத்தடிநீர் இருக்கிறது எனவும் தவறான கருத்துகளை தெரிவித்துள்ளார்கள். இத்தகைய உண்மைக்கு புறம்பான அறிக்கைகளை ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை ஒன்றிய ஜல்சக்தி அமைச்சரிடம் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளிக்க உள்ளார்.

தற்போது, கடந்த செப்.13ம் தேதி முதல் 15 நாட்களுக்கு, கர்நாடக காவிரிப் பகுதியில் சராசரி இயல்பான மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு துறை அறிக்கையின் அடிப்படையில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கணித்துள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 12,500 கனஅடி நீரை கர்நாடகா விடுவித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 12,500 கனஅடி நீரை கர்நாடகா விடுவித்திட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும்.
* ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் இதை ஆணையத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.
* காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு அளித்த உத்தரவின்படி தமிழ்நாட்டிற்கு குறிப்பிட்டுள்ள நீரை குறித்த காலத்தில் வழங்குமாறு கர்நாடகாவிற்கு தகுந்த அறிவுரையை வழங்கிட வேண்டும்.

The post காவிரியில் தண்ணீர் திறக்க கோரி ஒன்றிய அமைச்சரிடம் அனைத்து கட்சி எம்பிக்கள் மனு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : CM ,G.K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Kaviri ,Minister of the ,Union ,of ,PP ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இயல்பை விட 83% மழை குறைவு: வானிலை மையம் தகவல்