டெல்லி: தமிழ்நாட்டில் தே.ஜ.கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை உடனே இறுதி செய்ய பழனிசாமிக்கு அமித்ஷா கெடு விதித்துள்ளார். ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளை தற்போதே ஒன்றிணைக்க அதிமுகவை பாஜக கேட்டுக்கொண்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நேற்று டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக அரைமணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்கூட்டியே தயாராக வேண்டும் என்று எடப்பாடியிடம் அமித்ஷா நிபந்தனை விதித்துள்ளார்.
‘செல்வாக்கு உள்ள தொகுதிகளை பாஜக கேட்கக்கூடாது’: எடப்பாடி வலியுறுத்தல்
அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை பா.ஜ.க. கேட்கக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் பட்டியலை அமித்ஷாவிடம் பழனிசாமி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை பறிக்க வேண்டாம் என்று பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 7 நாடாளுமன்ற தேர்தல்களில் அதிமுக வென்ற இடங்களின் பட்டியலை பழனிசாமி அளித்ததாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியை மாநில கட்சிகளுடன் இறுதிசெய்யும் பணியில் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கூட்டணி தொடர்பாக மாநில கூட்டணி கட்சித் தலைவர்களுடன் அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகளை ஒன்றிணைத்து போட்டியிட பா.ஜ.க. விருப்பம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் தே.ஜ.கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை உடனே இறுதி செய்ய பழனிசாமிக்கு அமித்ஷா கெடு..!! appeared first on Dinakaran.