×

பேச்சிப்பாறை அணை வழியாக அரசு பள்ளிக்கு படகில் செல்லும் மாணவர்களுக்கு ‘லைப்’ ஜாக்கெட் கலெக்டர் தர் வழங்கினார்

குலசேகரம், செப்.9: பேச்சிப்பாறை அணை வழியாக அரசு பள்ளிக்கு படகில் செல்லும் மாணவர்களுக்கு ‘லைப்’ ஜாக்கெட்டை கலெக்டர் தர் வழங்கினார். குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையின் மறுபக்கத்தில் தோட்டமலை, தச்சமலை, களப்பாறை உட்பட பல மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் தங்கள் தேவைகளுக்காக பேச்சிப்பாறை அணையை படகுகள் மூலம் கடந்து, இதர பகுதிக்கு வந்து செல்ல வேண்டும். இதற்காக பேச்சிப்பாறை அணையில் தனியாரால் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதே போன்று மலை வாழ் குடியிருப்புகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள பள்ளிக்கு படகுகளில் கட்டணம் செலுத்தி வந்து செல்கின்றனர். இவர்கள் வரும் படகுகளில் லைப் ஜாக்கெட் உட்பட எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லை. இதனால் பள்ளிச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு படகுகளில் வரும் மலைவாழ் குடியிருப்புகளை சேர்ந்த 25 மாணவ, மாணவியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லைப் ஜாக்கெட் வழங்கப்பட்டது. இதனை பேச்சிப்பாறை அணை பகுதியில் வைத்து மாவட்ட கலெக்டர் தர் வழங்கினார்.

மாணவர்களிடம் இந்த லைப் ஜாக்கெட்களை அணிந்து படகுகளில் பயணிக்க வேண்டும். இதனை உங்கள் கைகளில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதில் திட்ட இயக்குனர் பாபு, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் சசி, யோசோதா, பேச்சிப்பாறை பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜோசினா, ஐயப்பன், தச்சமலை பேரீடர் மேலாண்மை குழு உறுப்பினர் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு தனிப்படகு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலெக்டரிடம் பேச்சிப்பாறை அணையில் பள்ளி மாணவ, மாணவியர் வசதிக்காக தனிப்படகு இயக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்ட கலெக்டர் இதற்கான வழி முறைகள் குறித்து ஆலோசிப்பதாக கூறினார்.

The post பேச்சிப்பாறை அணை வழியாக அரசு பள்ளிக்கு படகில் செல்லும் மாணவர்களுக்கு ‘லைப்’ ஜாக்கெட் கலெக்டர் தர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Pachiparai dam ,Kulasekaram ,Pachyparai dam ,Dinakaran ,
× RELATED பேச்சிப்பாறையில் படகில் பயணித்து வாக்களித்த மலைவாழ் மக்கள்