குடியாத்தம்: போதையில அடிச்சதால அம்மா தற்கொலைக்கு முயன்றாங்க, அதனால அப்பாவை பிடிச்சு உள்ளே போடுங்க சார் என்று குடியாத்தம் போலீசில் 13 வயது சிறுவன் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த முல்லைநகரை சேர்ந்தவர் ஜாபர்(38), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பரானா(35). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். ஜாபர் குடிபோதையில் மனைவியை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. பிள்ளைகளையும் அடித்துள்ளார். இதனால், மனமுடைந்து பரானா நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த 13 வயது மகன், சைக்கிளில் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு சென்று, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியிடம், எனது தந்தை குடிபோதையில் தாயையும், எங்களையும் துன்புறுத்துகிறார். அவரை பிடிச்சு உள்ளே போடுங்க சார் என புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சென்று ஜாபரிடம் விசாரணை நடத்தி அறிவுரை வழங்கினர். இதற்கிடையே, நேற்று குடியாத்தத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதில் ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன் கலந்து கெண்டார். அங்கும் வந்து 13 வயது சிறுவன் தந்தை மீது புகார் மனு அளித்தார். அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.
The post போதையில அம்மாவை அடிக்கிறாரு அப்பாவை புடிச்சி உள்ளே போடுங்க: போலீசில் புகார் அளித்த சிறுவன் appeared first on Dinakaran.
