- கலைஞர் நூற்றாண்டு மராத்தான் போட்டி
- மோகனூர்
- மோகனூர்
- அண்ணா அரசு கலைக் கல்லூரி
- கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்
- தின மலர்
மோகனூர், ஆக. 31: மோகனூர் அடுத்த லத்துவாடி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடைபெற்றது. நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய மாரத்தான் போட்டியை, நகர்மன்ற தலைவர் கலாநிதி, ரோட்டரி கிளப் தலைவர் ராகேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்போட்டி கொண்டிசெட்டிப்பட்டி வழியாக கல்லூரியை வந்தடைந்தது. சுமார் 5 கி.மீ., நடைபெற்ற போட்டியில் பெண்கள் உள்பட 600க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜா தலைமை வகித்தார். இதில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி., வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர். பின்னர் அமைச்சர் மதிவேந்தன் பேசுகையில், ‘விளையாட்டின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே கொண்டு செல்ல, அமைச்சர் உதயநிதி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் திமுக அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததால் தான், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. திமுக மக்களுக்கு கொண்டு வந்த திட்டங்களை அறியவே, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சமத்துவம், அனைவருக்குமான சமூகநீதி, சுயமரியாதையை வலிமையாக செயல்படுத்தி வருவது தான் திமுக. பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். மாணவர்கள் அரசியல் தலைவர்களை சரியாக தெரிந்துகொள்ள வேண்டும்,’ என்றார்.
தொடர்ந்து, மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, கல்லூரியில் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி மற்றும் கூட்டரங்கம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, மாவட்ட தடகள சங்க துணை தலைவர் நடராஜன், வேதியியல் துறை தலைவர் சக்திவேல், ஒருங்கிணைப்பாளர் அருண்பிரகாஷ், கல்லூரி உடற்கல்வி இயக்குநர் கார்த்திக், என்.சி.சி ஒருங்கிணைப்பாளர் செளந்தரராஜன், பேராசிரியர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.