×

தங்கையை பார்க்க வந்த அக்கா வீட்டின் சுவர் இடிந்து சாவு

பண்ருட்டி, ஆக. 29: பண்ருட்டி அருகே தங்கையை பார்க்க வந்த அக்கா வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே குடுமியான்குப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் கமலா. இவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனையறிந்த அவரது அக்கா சென்னையில் வசித்து வரும் மீனா (65) என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தங்கையை பார்க்க குடுமியான்குப்பம் கிராமத்துக்கு வந்தார். அங்கு தங்கி தங்கை கமலாவின் உடல் நலத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் வீட்டின் மண் சுவர் ஈரமாகி திடீரென இடிந்து மீனா மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மீனாவுக்கு 2 பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது.

சத்துணவு கட்டிட மேற்கூரை விழுந்து பெண் பணியாளர் படுகாயம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே பாலூர் சன்னியாசிபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. சன்னியாசிபேட்டையை சேர்ந்த குப்புசாமி மனைவி சாந்தி (55) பள்ளியில் சத்துணவு ஊழியராக பணி செய்து வருகிறார். நேற்று காலை சாந்தி மாணவர்களுக்கு உணவு தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டிடத்தின் மேல் கூரை சிமெண்ட் கான்கிரீட் இடிந்து சாந்தியின் தலையில் விழுந்ததில் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் சாந்தியை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகன் சம்பவ இடத்துக்கு வந்து கட்டிடத்தை பார்வையிட்டு உடனே பொக்லைன் மூலம் கட்டிடத்தை இடித்து அகற்றினார்.

The post தங்கையை பார்க்க வந்த அக்கா வீட்டின் சுவர் இடிந்து சாவு appeared first on Dinakaran.

Tags : Aka ,Panrutti ,Panruti ,Cuddalore ,Dinakaran ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு