இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தோஷகானா ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமரான இம்ரான்கான் மீது அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் அரசு கருவூல பரிசு பொருட்களை முறைகேடாக விற்பனை செய்ததாக கடந்த 2022ம் ஆண்டில் குற்றம் சாட்டியது. இதையடுத்து அவர் மீது தோஷகானா ஊழல் வழக்கு பதியப்பட்டது. இதனை விசாரித்த இஸ்லாமாபாத் மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஹூமாயுன் திலாவர் கடந்த 5ம் தேதி அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையடுத்து, லாகூரில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, இம்ரான் தரப்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில், தலைமை நீதிபதி அமீர் பாருக், நீதிபதி தாரிக் மெக்மூத் ஜஹாங்கிரி அமர்வு விசாரித்து இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து ஜாமீனில் விடுவிக்குமாறு உத்தரவிட்டனர். இம்ரான் கான் ரகசிய காப்புப் பிரமாணத்தை மீறியதாகத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அவர் சிறையிலேயே இருப்பார் என தெரிகிறது.
The post தோஷகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானின் 3 ஆண்டு தண்டனையை நிறுத்தி வைத்தது பாக். உயர் நீதிமன்றம்: ஜாமீனில் வெளிவருவாரா? appeared first on Dinakaran.