×

சேலம் ஆவினில் இருந்து கடற்படைக்கு பால்

சேலம், ஆக.22: இந்தியகடற்படைக்கு சேலம் ஆவினில் இருந்து 86 ஆயிரம் லிட்டர் பால் அனுப்பி வைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து சேகரிக்கப்படும் பால், ஆவின் பால் பண்ணைகளில் சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன்படி சேலம் மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியமானது (ஆவின்) 800 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் கட்டமைப்பில் செயல்பட்டு வருகிறது. 2.5 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் தினமும் 5 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. உள்ளுர் தேவைக்கு தினமும் 2.10லட்சம் லிட்டர் பால் பாக்கெட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. சென்னைக்கு 2 லட்சம் லிட்டர் அனுப்பபடுகிறது.

மீதியுள்ள பாலை பால் பவுடராகவும், நெய், இனிப்பு தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அளவில் பால் கூட்டுறவு அமைப்புகளின் கீழ் பால் கொள்முதலில் சேலம் ஆவின் முதல் இடத்தைபெற்றுள்ளது. ஆவின் நிறுவனம், பால் மற்றும் பால் உப பொருட்களான நெய், பால் பவுடர், பன்னீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், நறுமணபால் வகைகள், ஐஸ்கிரீம், குல்பி, சாக்லெட்மற்றும் பிஸ்கட் வகைகள் விற்பனை செய்து வருகிறது. சேலம் ஆவின் பால் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மேலும், துணை ராணுவத்திற்கும் சேலம் ஆவினில் இருந்து பால் அனுப்பி வைக்கப்படுறது. இதனிடையே, இந்திய கடற்படைக்கு 86 ஆயிரம் லிட்டர் பால் அனுப்ப சேலம் ஆவினுக்கு ஆர்டர் வந்துள்ளது. இதைதொடர்ந்து முதல் கட்டமாக சேலம் ஆவினில் இருந்து 10 ஆயிரம் லிட்டர் பால் சென்னை அடையாறில் உள்ள கடற்படை ராணுவ அலுவலகத்திற்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதியுள்ள பால் அனுப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து ஆவின் அதிகாரிகள் கூறியதாவது: சேலம் ஆவினில் இருந்து வெளி நாடுகளுக்கு பால் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்தியகடற்படை ராணுவத்திற்கு ₹50 லட்சத்தில் 86ஆயிரம் லிட்டர் பால் கேட்டு ஆர்டர் வந்துள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக சென்னை அடையாறில் உள்ள கடற்படை ராணுவ முகாமிற்கு சொந்தமான குடோனுக்கு 10 ஆயிரம் லிட்டர் பால் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீதியுள்ள பால் அனுப்பி வைக்கப்படும். சேலத்தில் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் பிளாண்ட் அமைக்கப்பட்டு, மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களுக்கு ஐஸ்கிரீம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post சேலம் ஆவினில் இருந்து கடற்படைக்கு பால் appeared first on Dinakaran.

Tags : Salem Awin ,Salem ,Indian Navy ,Salem Aain ,Navy ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...