×

பைக் மீது அரசு பஸ் மோதி ஒரே குடும்பத்தில் 2 பேர் பலி

உளுந்தூர்பேட்டை, ஆக.18: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி உ.கீரனூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜாங்கம். இவரது மகன் வினித்குமார் (26), பொறியியல் பட்டதாரியான இவர் கள்ளக்குறிச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இவர் தனது தாத்தா அண்ணாமலையின் துக்க நிகழ்ச்சிக்காக உளுந்தூர்பேட்டைக்கு வந்துள்ளார். நேற்று காலை விருத்தாசலம் சாலையில் உள்ள கடையில் பைக் வாங்குவதற்காக வினித்குமார், தனது சின்னம்மா கற்பகம் (44) என்பவருடன் சென்றுள்ளார்.

அங்கிருந்த ஒரு பைக்கை ஓட்டி பார்த்து வாங்க முடிவு செய்துள்ளார். அதன்படி பைக்கை எடுத்துக்கொண்டு தனது சின்னம்மாவுடன் விருத்தாசலம் ரோட்டில் ஓட்டிச்சென்றபோது அந்த வழியாக சென்னையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கற்பகம் பேருந்தின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். வினித்குமார் தலையில் படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்தார். விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணாளன், சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

The post பைக் மீது அரசு பஸ் மோதி ஒரே குடும்பத்தில் 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Ulundurpet ,Rajangam ,U. Keeranur ,Kallakurichi district ,Vinithkumar ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது அரசு...