×

சட்டத்துக்கு புறம்பாக ஜவுளி ரகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டால் வழக்கு

அரியலூர், ஆக.17: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்ட செய்தி குறிப்பு ;1) பேட்டு பார்டருடன் கூடிய சேலை, 2) பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி, 3) துண்டு மற்றும் அங்கவஸ்திரம், 4) லுங்கி, 5) போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, 6) ஜமக்காளம், 7) உடை துணி, 8) கம்பளி, 9)சால்வை, 10) உல்லன் ட்வீட் மற்றும் 11) சத்தார்க் ஆகிய ரகங்களை குறிப்பிட்ட தொழில்நுட்ப குறியீடுகளுடைய ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்யக்கூடாது என்று கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ல் வரையறுக்கப்பட்டுள்ளது.வெளிமாநிலங்களிலிருந்து அரியலூர் மாவட்டத்துக்கு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்துக்கு புறம்பாக தனியார் விற்பனை நிலையங்களில் ஜவுளி ரகங்கள் மலிவு விலையில் காட்சிப்படுத்தப்பட்டு கைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்பட்டது என விளம்பரப்படுத்தி விற்பனை மேற்கொள்வதாக தெரிவித்து கைத்தறி நெசவாளர்கள் இதன் காரணமாக தங்களது வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதாக தெரிவித்து வருகின்றனர். இதைத் தவிர்க்கும் வகையில் தற்போது கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985 அமல்படுத்தி வரும் கைத்தறி துறையால் தற்போது பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி, இந்த பறக்கும் படைகள் மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்கள், தனியார் ஜவுளி விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மேற்படி ஆய்வு மேற்கொள்ளும் சமயத்தில் சட்டத்துக்கு புறம்பாக ஜவுளி ரகங்கள் உற்பத்தியில் ஈடுபடுதல், காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை கண்டறியும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட தனியார் விற்பனை நிலையங்கள் மற்றும் உற்பத்தி மேற்கொள்ளும் விசைத்தறியாளர்கள் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும். மேலும், தனியாரிடம் கூலிக்கு நெசவு செய்யும் கைத்தறி நெசவாளர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களையும் வகையில் தனியார் நெசவாளர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தொடர்ச்சியாக வேலைவாய்ப்பையும், அதற்கான ஊதியமும் பெற்று பயனடையலாம்.

சங்க உறுப்பினருக்கு ஒன்றிய , மாநில அரசுகள் மூலம் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டம், குடும்ப ஓய்வூதிய திட்டம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், இலவச வீடுகட்டும் திட்டம், இலவச மின்சரா திட்டம், பிரதான் மந்திரி சர்வசிக்ஷா யோஜனா, பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, மகாத்மா காந்தி புங்கர் பீமா யோஜனா ஆகிய நலத்திட்டங்கள் பெற்று வழங்கிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும் கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற அரியலூர் மாவட்ட பகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள திருச்செங்கோடு உதவி அமலாக்க அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (04288-258139) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

The post சட்டத்துக்கு புறம்பாக ஜவுளி ரகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டால் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,District Collector ,Annie Mary Swarna ,
× RELATED பெரம்ப லூர் மாவட்டம் 96.44 சதவீதம்...