×

சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த இலங்கை வாலிபர் கைது: 4 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இடைநீக்கம்

சென்னை: சென்னை விமான நிலையத்தில், எந்தவொரு ஆவணமும் இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பை தாண்டி, குடியுரிமை அலுவலக ஊழியரின் செல்போனை திருட முயன்ற இலங்கை வாலிபரை விமான நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில், புறப்பாடு பகுதியில் 7ம் எண் கேட் வழியாக இளைஞர் ஒருவர் விமான நிலையத்திற்குள் நுழைந்தார். அந்த இளைஞரிடம் விமான டிக்கெட், அல்லது உள்ளே நுழைவதற்கான சிறப்பு அனுமதி பாஸ் எதுவும் இல்லை. ஆனாலும் அந்த 7ம் எண் கேட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள், இளைஞரை எந்தவித விசாரணையும் இன்றி உள்ளே அனுப்பிவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், இளைஞர் குடியுரிமை சோதனை நடக்கும் கவுன்டர் பகுதி வரை சென்று, அங்கு சுற்றி அலைந்து கொண்டிருந்தார். பின்னர் அவர் இரவு 10 மணியளவில் குடியுரிமை அலுவலக கவுன்டர் பகுதியில் நின்று, ஊழியர் ஒருவரின் செல்போனை திருட முயன்றுள்ளார். அப்போது குடியுரிமை ஊழியர்கள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள், இளைஞரை மடக்கி பிடித்து சென்னை விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைத்தனர். அங்கு விசாரணை நடத்திய போது, அந்த இளைஞர் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தினேஷ் ஞானசூரியன் (35) என்பது தெரிய வந்தது. கடந்த மே 5ம் தேதி இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ளார். சென்னை எழும்பூரில் தங்கி உள்ளார். அந்த இளைஞரை சோதனை நடத்திய போது, அவரிடம் ஈழத் தமிழர் பாதுகாப்பு கழகம், ஈழ எதிலியர் மறுவாழ்வு கழகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள், மத்திய, மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள், கியூ பிராஞ்ச் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, இலங்கை இளைஞர் 3 மாத விசாவில் தமிழகம் வந்துள்ளார். தொடர்ந்து, அவரை நேற்று காலை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணையில், அந்த இளைஞர் முன்னுக்கு பின் முரனாக பதிலளித்தார். இதனால் அந்த வாலிபர் மீது பாதுகாப்பின்போது அத்துமீறி விமான நிலையத்திற்குள் நுழைந்தது, செல்போன் திருடியது, எந்தவித ஆவணமும் இல்லாமல் பாதுகாப்புக்கு ஊறு விளைவித்தது, விமான நிலைய பாதுகாப்பு சட்டம், வெளிநாட்டவர் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், பாதுகாப்பு பணியில் அலட்சியமாக செயல்பட்ட 4 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களை இடைநீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பை மீறி நுழைந்த இலங்கை வாலிபர் கைது: 4 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இடைநீக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Central Security Forces ,CHENNAI ,
× RELATED சென்னை விமானநிலையத்தில் நடப்பு...