![]()
*பயணிகள் கூட்டம் அலைமோதல்
குலசேகரம் : குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு அடுத்ததாக பெரிய சுற்றுலா தலம் திற்பரப்பு அருவி. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் கோதையாறு அருவியாக விழுவதால் குறிப்பிட்ட சீசன் என்று இல்லாமல் ஆண்டின் பெரும்பாலான நாட்களிலும் தண்ணீர் கொட்டி பயணிகளை மகிழ்விக்கிறது.
மழை காலங்கள் மற்றும் பேச்சிப்பாறை, சிற்றார் அணைகளில் உபரி நீர் திறக்கும் போதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இந்த ஆண்டு மே மாதம் கோடைமழை இல்லை. தொடர்சியாக பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை சில நாட்கள் சாரல் மழையாக மட்டுமே பெய்தது. பாய்ந்து ஓடும் கோதையாறு சிறு ஓடை போன்று சென்றது. இதனால் திற்பரப்பு அருவியில் குறைந்த அளவு தண்ணீர் கொட்டி வந்தது.
கடந்த 2 வாரங்களுக்கு முன் சிற்றாறு 2 அணையில் மறுகால் ஷட்டர் பராமரிப்பு பணி நடந்தது. இதனால் ஷட்டர் வழியாக சுமார் 75 கனஅடி தண்ணீர் வெளியேறி வந்தது. இந்த தண்ணீர் கோதையாற்றில் பாய்ந்து சென்றது. இதனால் திற்பரப்பு அருவியில் மழை இல்லாதபோதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இந்த பணிகள் சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது. ஷட்டர்கள் வழியாக தண்ணீர் வெளியேறுவது நிறுத்தப்பட்டது. இதனால் கோதையாற்றில் குறைந்த அளவு தண்ணீர் பாய்கிறது. பருவமழை காலங்களில் பரந்து விரிந்து பாயும் கோதையாறு மழை பொய்த்து போனதால் நீரோடை போல் மாறிவிட்டது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் குறைந்து மிதமான அளவு கொட்டுகிறது.
கோடையை மிஞ்சும் அளவு வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் நீர்நிலை சார்ந்த சுற்றுலா தலங்களுக்கு விரும்பி செல்கின்றனர். இதனால் திற்பரப்பு அருவிக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறையை தொடர்ந்து சுதந்திர தின விடுமுறை, ஆடி அமாவாசை உள்ளூர் விடுமுறை என தொடர் விடுமுறை இருப்பதால் திற்பரப்பு அருவி களை கட்டியுள்ளது. அருவியில் குளிக்கும் பகுதி, சிறுவர் நீச்சல் குளம், பூங்கா என எல்லா பகுதிகளிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
அருவியின் மேல் பகுதியில் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு தடுப்பணையிலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இங்கு நடைபெறும் உல்லாச படகு சவாரியிலும் பயணிகள் ஆர்வமுடன் படகுகளில் சென்று கோதையாற்றின் இயற்கை அழகை பார்த்து மகிழ்ந்தனர். நேற்று கடும் வெயில் நிலவிய நிலையில் திற்பரப்பு பகுதியில் வெயில் மங்கிய நிலையில் பயணிகளை கவர்ந்தது.
The post திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் appeared first on Dinakaran.
