×

அதிபர் வேட்பாளர் கொலை எதிரொலி: ஈக்வடார் நாட்டில் அவசர நிலை பிரகடனம்

குயிட்டோ: தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 8 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் பெர்னாண்டோ வில்லிவிசென்சியோவும் ஒருவர். நிருபரான அவர், ஊழலுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தலைநகர் குயிட்டோவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசி விட்டு வீட்டுக்கு செல்வதற்காக காரில் ஏறினார். அப்போது ஒரு மர்ம நபர், பெர்னாண்டோவை துப்பாக்கியால் சுட்டார். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

பெர்னாண்டோவின் பாதுகாவலர்கள் உள்பட பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் தப்பி விட்டார். இந்நிலையில் குற்றவாளியை கைது செய்ய கோரி அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஈக்வடாரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு அந்நாட்டின் அதிபர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலையும், கண்டனத்தையும் தெரிவித்தனர். குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், தலைநகர் குயிட்டோவில், ஆயுதங்களுடன் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த வெளிநாட்டினர் 6 பேரை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், அதிபர் கில்லர்மோ லாஸ்சோ கூறுகையில், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது. சட்டத்தின் முழு பலமும் குற்றவாளி மீது காட்டப்படும். திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும். இதற்காக நாடு முழுவதும் 60 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

The post அதிபர் வேட்பாளர் கொலை எதிரொலி: ஈக்வடார் நாட்டில் அவசர நிலை பிரகடனம் appeared first on Dinakaran.

Tags : Ecuador ,Quito ,American ,Dinakaran ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...