×

14 ஏரிகள் பாசன கால்வாய் இணைப்பு பணி 50% நிறைவு

தர்மபுரி, ஆக.7: பாலக்கோடு அருகே, ₹30.37 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் ஜெர்த்தலாவ் – புலிக்கரை உள்ளிட்ட 14 ஏரிகள் பாசன கால்வாய் இணைப்பு பணிகள், 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. பாறைகள் அடர்த்தியால் இப்பணிகள் மெதுவாக நடக்கிறது. தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பஞ்சப்பள்ளி அருகே சின்னாறு அணை உள்ளது. இந்த அணைக்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளாக தேன்கனிக்கோட்டை, தளி, பெட்டமுகிலாளம் உள்ளிட்ட (யானை நடமாட்டம் உள்ள காடு) வனப்பகுதி உள்ளது. மழைக்காலங்களில் இந்த வனப்பகுதிகளில் பெய்யும் மழைநீர், காட்டாற்று வெள்ளமாக கரைபுரண்டு சின்னாறு அணையில் கலக்கிறது. மழைக்காலங்களில் சின்னாறு அணை நிரம்பி வெளியேற்றப்படும் உபரிநீர் பாலக்கோடு, பென்னாகரம் வழியாக சென்று ஒகேனக்கல் காவிரியாற்றில் கலக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, இந்த உபரிநீரை ஏரிகளுக்கு திருப்பி விட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சின்னாறு அணையின் மழைக்கால உபரி நீரை கொண்டு செல்ல, ஜெர்த்தலாவ் ஏரியில் இருந்து புலிக்கரை ஏரியை இணைக்க, தற்போது புதிய கால்வாய் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் வட்டத்தில் உள்ள மேக்கலாம்பட்டி ஏரி, அழகம்பட்டி ஏரி, கம்மநாயக்கம்பட்டி ஏரி, மோதுகுலஅள்ளி ஏரி, சோமனஅள்ளி ஏரி, காட்டேரி, கொல்லஅள்ளி ஏரி, காட்டனஅள்ளி ஏரி, பெத்தலஅள்ளி ஏரி, ஜப்பால்குட்டை, பேகாரஅள்ளி ஏரி, பெத்தன்குட்டை ஆகிய 14 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எர்ரனஅள்ளி, கரகதஅள்ளி, காட்டனஅள்ளி, கருக்குமாரனஅள்ளி, மோதுகுலஅள்ளி, பி.கொல்லஅள்ளி, பேகாரஅள்ளி, புலிக்கரை ஆகிய 14 வருவாய் கிராமங்களும் பயனடைகின்றன. நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும், இந்த ஏரிகள் மூலம் 432.80 ஏக்கர் பாசன வசதி பெறும். இதன் மூலம் 1572 டன் உணவு உற்பத்தியாகும்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 24ம்தேதி, பாலக்கோடு எர்ரனஅள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ₹30.37 கோடி மதிப்பீட்டில் ஜெர்த்தலாவ் ஏரி கால்வாய் நெடுகை 5 கிலோ மீட்டரிலிருந்து, ஒரு புதிய கால்வாய் அமைத்து எர்ரனஅள்ளி ஏரி, புலிக்கரை ஏரி உட்பட இதர 14 ஏரிகளுக்கு சின்னாறு அணையின் மழைக்கால வெள்ள உபரிநீர் வழங்கும் திட்டப்பணி தொடங்கப்பட்டது. வேளாண்மைதுறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு இந்த புதிய கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த பணி தற்போது 50 சதவீதம் முடிந்துள்ளது. கரகதஅள்ளி உள்ளிட்ட சில இடங்களில் பாறைகள் உடைத்து பாசன கால்வாய் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில், வேளாண்மை துறை அமைச்சர் மூலம் நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நபார்டு திட்டத்தின் கீழ் ஜெர்தலாவ் ஏரி-புலிக்கரை ஏரி உள்ளிட்ட 14 ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம் ₹30.37 கோடி மதிப்பீட்டில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கால்வாய் வெட்டி அமைக்கும் பணி தொடங்கியது. பாறைகள் அடர்த்தியாக உள்ளதால், பணிகள் மெதுவாக நடக்கிறது. மேலும் வளைவுப்பகுதிகள் அதிகமாக உள்ளதாலும் பணிகள் மெதுவாக நடக்கிறது. பாறைகளை தகர்ந்து அப்புறப்படுத்தி, கால்வாய் பணி அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பு அடைந்துள்ளது. 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர் கொண்டு வரும் பாசன கால்வாய் அமைக்கப்படுகிறது. தற்போது 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. இதர பணிகள் வரும் டிசம்பர் மாதத்தில் நிறைவடையும். பட்டா மற்றும் அரசு புறம்போக்கு நிலம் மொத்தம் 24.18 ஹெக்டர் பரப்பில், நிலம் எடுக்கப்பட்டு பணிகள் நடக்கிறது என்றனர்.

The post 14 ஏரிகள் பாசன கால்வாய் இணைப்பு பணி 50% நிறைவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Jerthalao ,Pulikarai ,Palakod ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்