×

மாயாற்றின் குறுக்கே நடக்கும் பாலப்பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

 

கூடலூர், ஆக.7: முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தெப்பக்காடு வழியாக ஓடும் மாயாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய பாலப் பணிகளை விரைந்து முடிக்ககோரிக்கை எழுந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காட்டில் இருந்து மசினகுடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தெப்பக்காடு வழியாக ஓடும் மாயாற்றின் குறுக்கே பழைமையான பாலம் இருந்தது. இந்த பாலம் குறுகி இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் புதிய பாலம் அமைத்து தர கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்காக பழைய பாலம் கடந்த ஆண்டு முழுமையாக இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணிகள் துவங்கியது. பின்னர் மழைக்காலம் ஆரம்பித்ததால் பாலப்பணிகள் தடைபட்டன. பின்னர் மீண்டும் அடுத்த மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் இதுவரை 30 சதவீத பணிகளே நடைபெற்றுள்ளன. மேலும் மழைக்காலத்தில் ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகரிப்பதால் பணிகள் அக்டோபர் மாதத்தில் மீண்டும் துவங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிகமாக வாகனங்கள் செல்லும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தரைப்பாலமும் ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகரிக்கும் போது வாகனங்கள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் புதிய பாலம் அகலமாக அமைக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில் குறுகிய அகலத்தில் பாலம் அமைக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே பாலத்தை அகலப்படுத்தி, பாலப்பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என சுற்று வட்டார பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post மாயாற்றின் குறுக்கே நடக்கும் பாலப்பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Maya ,Kudalur ,Mudumalai ,Tiger Reserve ,Theppakkad ,Masinagudi ,Dinakaran ,
× RELATED முதுமலை பகுதியில் சாலையில் சென்ற...