×

வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்: விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க ஏற்பாடு

சென்னை: வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் அமைந்துள்ள வில்லிவாக்கம் ஏரி 39 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரிய கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்நிலை, முறையான பராமரிப்பின்றி கிடந்தது. எனவே, இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்பேரில், மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.16 கோடியில் இந்த ஏரியை பசுமை பூங்காவாக மாற்றும் பணி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் திட்ட மதிப்பீடு ரூ.45 கோடியாக உயர்ந்தது. இந்த சீரமைப்பு பணிக்காக சென்னை குடிநீர் வாரியம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 11.50 ஏக்கர் பரப்பை மட்டும் வைத்துக்கொண்டு, மீதம் உள்ள 27.50 ஏக்கர் பரப்பை மாநகராட்சி வசம் ஒப்படைத்தது.

அப்போது அந்த ஏரியின் ஆழம் ஒரு மீட்டராக மட்டுமே இருந்தது. சீரமைப்பு பணியில் சுமார் 5 மீட்டர் ஆழம் வரை ஏரி தூர்வாரப்பட்டது. அதன் மூலம் நீர் கொள்திறன் 70 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஏரிக்கு கரைகள் அமைப்பது, டிவிஎஸ் கால்வாயை ஒட்டி ஒரு சாலை அமைப்பது, குழந்தைகள் பூங்கா, பெரியவர்களுக்கான உடற்பயிற்சி மையம், நடைபயிற்சி பாதை, ஆவின் விற்பனை நிலையம், நுழைவாயில், பல்நோக்கு தாழ்வாரம், வாகன நிறுத்துமிடங்கள், விளையாடும் இடங்கள், தடுப்பு வேலி, 12டி திரையரங்கம் ஆகியவற்றை அமைப்பது, இருக்கைகள் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்துதல், எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல், குப்பைத் தொட்டிகள் அமைத்தல், ஏரிக் கரையை பாதுகாக்க நவீன முறைகளை பின்பற்றுதல் போன்ற பணிகள் மேற்கொள்ள 2019ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, பல்வேறு பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில், முக்கிய அம்சமாக ஏரியின் நடுவில் கண்ணாடி தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 820 மீட்டர் நீளம், 3 அடி அகலத்தில், ரூ.8 கோடி செலவில் இது அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் நடந்துகொண்டே ஏரியின் அழகை கண்டு ரசிக்கலாம். ஒரே நேரத்தில் 250 பேர் வரை இந்த பாலத்தின் மீது நடக்கலாம் என்பதால், இது பொதுமக்களை அதிகம் கவரும். இந்த சேவை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டிலேயே கண்ணாடி பாலத்துடன் கூடிய பூங்கா அமைக்கப்படவிருப்பது, இதுவே முதன்முறை. இதனால், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும். குழந்தைகளுக்கு நல்ல பொழுதுபோக்காக இருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு அம்சங்களும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இங்கு, படகு சவாரியும் அமைய உள்ளது. விரைவில் இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்,’’ என்றனர்.

The post வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி பாலம் அமைக்கும் பணிகள் தீவிரம்: விரைவில் பயன்பாட்டிற்கு திறக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Williwakkam Lake ,CHENNAI ,Villivakkam lake ,Villivakkam Citco Nagar ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்