நெய்வேலி, ஆக. 2: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள சுரங்கங்கள் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஒப்பந்த தொழிலாளர்களை பிரதமர் அறிவித்த ரோஸ்கார் மேலா திட்டத்தின் கீழ் பணி நிரந்தரம் செய்ய கோரியும், பணி நிரந்தரம் செய்யும் வரை ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.50,000 வழங்க கோரியும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜீவா ஒப்பந்த தொழிலாளிகள் கடந்த 26ஆம் தேதி இரவு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கட்சியினர் என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று 7வது நாளாக என்எல்சி தலைமை அலுவலகம் எதிரே வேலை நிறுத்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் என்எல்சி நிறுவனம் சார்பில் 517 சொசைட்டி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் பணி மூப்பு பட்டியலை வெளியிட்டனர். இதுகுறித்து என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் அந்தோணி செல்வராஜ் கூறுகையில். என்எல்சி நிறுவனம் சொசைடியில் உள்ள 6000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும், ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேலும் பணி நிரந்தரம் செய்யும் வரை மாத ஊதியம் ரூபாய் 50,000 வழங்க வேண்டும் என கூறினார். என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து தலைமை அலுவலக எதிரே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
The post என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் 7வது நாளாக தொடர் போராட்டம் appeared first on Dinakaran.