×

தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தலைமை திடீர் அழைப்பு: டெல்லியில் 4ம் தேதி கார்கே, ராகுல் தலைமையில் ஆலோசனை

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 39 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகளில் தேனி தொகுதி தவிர 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த முறையும் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் ஒட்டு மொத்த வெற்றியை பெற வேண்டும் என டெல்லி காங்கிரஸ் தலைமை கருதுகிறது. இதனால் காங்கிரஸ் தலைமை, முதல்கட்டமாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், இந்நாள் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் உள்ளிட்டவர்களுடன் தேர்தல் வெற்றி வியூகம் குறித்து விவாதிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் ஈவிகேஎஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட மூத்த தலைவர்கள், 8 எம்பிக்கள், இந்நாள், முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்டவர்களுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமை திடீர் அழைப்பு விடுத்துள்ளது. வரும் 4ம்தேதி டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முக்கிய நிர்வாகிகள் அனைவரும் டெல்லி புறப்பட்டு செல்ல தயாராகி வருகிறார்கள். அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி கலந்து கொள்கிறார்கள். அப்போது, தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முழுவீச்சில் தொடங்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்தும் கருத்து கேட்கிறார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தேர்தல் வெற்றிக்காக என்னென்ன பணிகளை தொடங்க வேண்டும்.

மக்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பன உள்ளிட்ட இன்னும் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அந்த கூட்டத்தில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமித்ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வரும் நிலையில், அதற்கு போட்டியாக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட அகில இந்திய தலைவர்களை அழைத்து வந்து தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் நடத்துவது குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் ராகுல் சுற்றுப்பயணம் உள்ளிட்ட அடுத்தடுத்த தேர்தல் பணிகளை தொடங்க தமிழ்நாடு காங்கிரசார் மேலிட தலைவர்களிடம் வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

The post தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தலைமை திடீர் அழைப்பு: டெல்லியில் 4ம் தேதி கார்கே, ராகுல் தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Congress ,Kharge ,Rahul ,Delhi ,Chennai ,DMK alliance ,Congress party ,Dinakaran ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...