×

பெயின்ட் கடைக்காரரை ₹5 லட்சம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி வசூர் ராஜா கூட்டாளியுடன் கைது ஜாமீனில் வெளியில் வந்து அட்டகாசம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள

வேலூர், ஜூலை 29: வேலூர் சத்துவாச்சாரியில் பெயின்ட் கடைக்காரரை ₹5 லட்சம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி வசூர் ராஜா அவரது கூட்டாளியுடன் நேற்று கைது செய்யப்பட்டார். வேலூர் புது வசூரை சேர்ந்தவர் ராஜா என்ற வசூர் ராஜா(40). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி மதுரை கப்பலூர் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் ₹50 கட்டணம் செலுத்த மறுத்து, சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வேலூர் சத்துவாச்சாரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த பெயின்ட் கடை உரிமையாளர் ஓ.எஸ்.பாஷாவை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு போனில் தொடர்பு கொண்ட வசூர் ராஜா, தான் வசூர் ராஜா என்றும், தனக்கு ₹3 லட்சம் தர வேண்டும். இல்லை என்றால் ஓ.எஸ்.பாஷாவை குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுதொடர்பான வழக்கு சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஜாமீனில் தற்போது வெளியில் உள்ள வசூர் ராஜா, நேற்று முன்தினம் (27ம் தேதி) பாஷா மற்றும் அவரது கடையில் வேலை செய்து வரும் சலீமுடன் பெருமுகையில் உள்ள தனியார் ஷூ கம்பெனிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை காரில் பின்தொடர்ந்து வந்த வசூர் ராஜா மற்றும் அவரது கூட்டாளியான காட்பாடி அடுத்த கார்ணாம்பட்டை சேர்ந்த டிரைவர் வெங்கடேசன்(35) ஆகிய 2 பேரும் பாஷாவையும், சலீமையும் வழிமறித்துள்ளனர்.

பின்னர் கத்தியை காட்டி மிரட்டி, ‘நாளை உன் கடைக்கு வருகிறேன். அப்போது ₹5 லட்சம் பணத்தை தயார் செய்து வைக்க வேண்டும். இல்லை என்றால் உன்னை குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன்’ என்று மிரட்டி, அவரிடம் இருந்து ₹20 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறித்துக் கொண்டனர். மேலும், ‘நாளை மீண்டும் வருவோம். அதற்குள் பணத்தை தயார் செய்து வைக்க வேண்டும்’ என்று மிரட்டி சென்றார்களாம். இதுதொடர்பாக பாஷா கொடுத்த புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து எஸ்பி மணிவண்ணன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் பெருமுகையில் மறைந்திருந்த வசூர் ராஜாவையும் காட்பாடி கார்ணாம்பட்டை சேர்ந்த அவரது கூட்டாளி டிரைவர் வெங்கடேசனையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெயின்ட் கடைக்காரரை ₹5 லட்சம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடி வசூர் ராஜா கூட்டாளியுடன் கைது ஜாமீனில் வெளியில் வந்து அட்டகாசம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள appeared first on Dinakaran.

Tags : Vasoor Raja ,Attakasam ,Vellore Sattuvachari ,Vellore ,Sattuvachari ,Atakasam ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்