×

மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச தொழிற்பயிற்சியில் சேர ஆக.31க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர்களின் எதிர்காலம் சிறக்க ஒன்றிய அரசின் NCVT சான்றிதழ் உடன் கூடிய தொழிற்பயிற்சி 6 தொழிற்பாடப் பிரிவுகளில் அளிக்கப்படுகிறது. சென்னை பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கும், சென்னை மாநகராட்சி ஊழியர்களின் குழந்தைகளுக்கும், மாணவர்கள் சேர்க்கையில் முன்னுரிமை அளித்து மீதி காலியாக உள்ள இடங்களுக்கு சென்னை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் படித்த ஏழை எளிய மாணவர்களை அவ்வப்போது அரசால் வெளியிடப்படும் விதிகளின்படி சேர்க்கை வழங்கப்படும். பயிற்சியில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்களுக்கு வயது வரம்பு கிடையாது.

சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தின் சிறப்பு அம்சமானது முற்றிலும் இலவச பயிற்சி அளித்து ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா நலத்திட்டங்களான சீருடை, பேருந்து பயண அட்டை, பாடப்புத்தகம் மற்றும் வரைபடக்கருவிகள், பாதுகாப்பு காலணி, இருசக்கர மிதிவண்டி, பயிற்சி நேர இடைவெளியில் காலை, மாலை இருவேளை தேநீர், பிஸ்கெட், மதிய உணவு மற்றும் பயிற்சி காலத்தில் மாதம்தோறும் ரூ.750 பயிற்சி உதவித் தொகை வழங்கப்படும்.

2023-24ம் கல்வி ஆண்டிற்கு தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பப் படிவத்தினை சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையத்தில் இலவசமாக பெறலாம் அல்லது இணையதள முகவரி www.chennaicorporation.gov.in மூலம் இலவசமாக பதிவு இறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்காணும் முகவரியில் நேரடியாக சமர்ப்பித்து சேர்க்கையினை பெறலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.08.2023 ஆகும். மாணவர்கள் பயிற்சியில் சேரும்போது அசல் சான்றிதழ்களான பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் ஆதார் நகல் ஆகியவற்றை வழங்க வேண்டும்.

குழாய் பொருத்துநர் (Plumber) பாடப்பிரிவுக்கு 8ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நேரடி சேர்க்கையின் போது அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பாடப்பிரிவு ஒதுக்கீடு செய்து பயிற்சியில் சேருவதற்கான அனுமதி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ஐஸ்அவுஸ், ராயப்பேட்டை, சென்னை-14 என்ற முகவரியிலும், 044-28473117, 29515312, 7010457571, 7904935430 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

The post மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் இலவச தொழிற்பயிற்சியில் சேர ஆக.31க்குள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Municipal Corporation Vocational Training Center ,Chennai ,Chennai Corporation ,Union Government ,
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!