×

பட்டா நிலத்தில் புதைத்த சடலத்தை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய வேண்டும்: கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அருகே நொச்சிலி ஊராட்சி, விஜயமாம்பாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மலு. இவர், கடந்த ஏப்ரல் 1ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அக்கிராமத்துக்கு அருகே ரமேஷ் என்பவரின் அனுமதியுடன், அவரது பட்டா நிலத்தில் நரசிம்மலுவின் உடல், போலீசாரின் எதிர்ப்பை மீறி புதைக்கப்பட்டது. இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அம்மனுவில், எங்கள் கிராமத்தில் மயானம் இருக்கும் நிலையில், சட்டவிரோதமாக பட்டாநிலத்தில் புதைக்கப்பட்ட சடலத்தைதோண்டி எடுத்து, மயானத்தில் முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம்மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், பட்டா நிலத்தில் சடலத்தை புதைக்க நிலத்தின் உரிமையாளர் அனுமதி வழங்கினாலும், பஞ்சாயத்து சட்டப்படி அங்கு உடலை புதைக்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார். இத்தீர்பை எதிர்த்து நரசிம்மலுவின் மனைவி ஜெகதீஸ்வரி மேல்முறையீடு செய்தார். இந்த முறையீட்டு மனுவை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வின் விசாரணைக்கு பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், ஜெயச்சந்திரன், முகமது ஷாபீக் ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தனர்.

பின்னர் இருதரப்பு வாதங்களின் முடிவில், நில உரிமையாளரின் அனுமதியுடன் சடலத்தை புதைத்தாலும், பஞ்சாயத்து சட்டத்தின்படி பட்டாநிலத்தில் சடலத்தை அடக்கம் செய்ய முடியாது. ஆனால், மயானம் இல்லாதநிலையில் முறைப்படி அனுமதி பெற்று சடலத்தை புதைக்கலாம். எனினும், அக்கிராமத்தில் மயானம் இருக்கும்போது, பட்டா நிலத்தில் புதைத்த சடலத்தை தோண்டி எடுத்து, மயானத்தில் முறைப்படி புதைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டருக்கு நேற்று 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. இதன்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பட்டா நிலத்தில் புதைத்த சடலத்தை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய வேண்டும்: கலெக்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Patta land ,Pallipatu ,Narasimmalu ,Vijayamambapuram ,Nochili Panchayat ,Pallipatu, Tiruvallur District ,Patta ,Dinakaran ,
× RELATED குறைந்தழுத்த மின் பிரச்னை கூடுதல்...