×

மரக்காணம் அருகே இரும்பு ராடுகளை ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து 3 பேர் பரிதாப பலி

மரக்காணம், ஜூலை 26: மரக்காணம் அருகே இரும்பு ராடுகள் மற்றும் இரும்பு பொருட்களை ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக பலியாயினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். புதுவை மாநிலம் அருகே உள்ள கோட்டக்குப்பம் பகுதியில் இருந்து இரும்பு ராடுகள் மற்றும் இரும்பு பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை ஒரு மினி வேன் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு சென்றது. இந்த வேனை கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (40) என்பவர் ஓட்டிச் வந்தார். இந்த லோடு ஏற்றி வந்த வண்டியின் மீது 4 தொழிலாளர்கள் அமர்ந்து வந்துள்ளனர். இதுபோன்று டிரைவரின் அருகில் ஒருவர் அமர்ந்து இருந்துள்ளார். இந்த வண்டி மரக்காணம் அருகே நாறவாக்கம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது எதிர்பாராதவிதமாக வண்டியில் பின்பக்க டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையோரம் கவிழ்ந்தது.

இதன் காரணமாக வண்டியில் இருந்த இரும்பு ராடுகள் மற்றும் இரும்பிலான கட்டுமான பொருட்களும் சரிந்து விழுந்ததில் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ஷாஜகான் (50), ஆறுமுகம் (47), பாஸ்கர் (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இவ்விபத்தில் டிரைவர் ரவிக்குமார் மற்றும் குமார் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த மரக்காணம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் உயிருக்கு போராடியவர்களை பத்திரமாக மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மரக்காணம் அருகே இரும்பு ராடுகளை ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து 3 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Marakanam ,Marakkanam ,
× RELATED கோயில் திருவிழா பிரச்னையால் தேர்தல்...