×

100 செவிலியருக்கு தாய்-சேய் நல கண்காணிப்பு பெட்டகம்

சேலம்,ஜூலை 22: சேலம் மாநகரில் வீடுகளுக்கே சென்று கர்ப்பிணிகளை பரிசோதிக்கும் வகையில் தாய்-சேய்நல கண்காணிப்பு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சி பகுதியில் 16 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு காய்ச்சல், சளி, இருமல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு நோய்களுக்காக தினமும் 3000க்கும் மேற்பட்ட பொது மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். கர்ப்பிணிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடர்ந்து ரத்த பரிசோதனைகள், இதர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் நடைபெறும் கர்ப்பிணிகளுக்கான பரிசோதனையில் சராசரியாக 50 முதல் 60 நபர்கள் பங்கு பெற்று ஆலோசனை பெற்று வருகின்றனர்.

அவர்களின் நலனை காக்கும் வகையில் கர்ப்பம் குறித்த விளக்கம் மற்றும் சந்தேகங்கள், யோகா வகுப்பு நடத்தப்படுகின்றன. கருவுற்ற பெண்ணுக்கு ஏற்படும் உயர் அழுத்தம், உடல்பருமன், நீரிழிவு நோய், வலிப்பு, தைராய்டு, இதயம், ரத்தக் கோளாறுகள், ஆஸ்துமா,நோய் தொற்றுகள் உள்ளிட்டவற்றை கண்டறிய தேவையான ரத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலம் ₹18ஆயிரம் வரை நிதியுதவி ,தாய் சேய் நல பெட்டகம் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் உள்ளிட்டவை அளிக்கப்படுகிறது.

கர்ப்பிணிகள் ஆர்வத்துடன் நகர்ப்புற ஆரம்ப நிலையங்களை நோக்கி வருகின்றனர். ஒவ்வொரு கர்ப்பிணியும் ஆரம்ப முதல் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதனால் பிரவச காலத்தில் ஏற்படும் சிக்கல்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு தக்க ஆலோசனை, சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் தேவை இன்றி செய்யப்படும் அறுவை சிகிச்சைகள் தவிர்க்கப்பட்டு அதிக எண்ணிக்கையால் சுகப்பிரசவங்கன் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, சேலம் மாநகராட்சி உட்பட்ட ரெட்டியூர், அன்னதானப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை தேசிய தர உறுதி சான்று பெறுவதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும் மற்ற நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேசிய தர உறுதி சான்று பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் 92 சதுர கி.மீ., பரப்பளவு 84 பகுதிகளாக பிரிக்கப்பட்டு 84 நகர்ப்புற சுகாதார செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்களின்வீடுகளுக்கே சென்று தொடர் பரிசோதனை மற்றும்சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவர்கள் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில், தாய் சேய்நல கண்காணிப்பு பெட்டகம் 100 செவிலியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், ரத்த அழுத்தமானி, ஸ்டெதாஸ்கோப், குளுக்கோ மீட்டர்,பல்ஸ்ஆக்சி மீட்டர், தெர்மா மீட்டர், வெயினிங் மிஷின் உள்ளிட்ட பரிசோதனைஉபகரணங்கள் அடங்கிய பெட்டகம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற செவிலியர்கள் கர்ப்பிணிகளின் வீடுகளுக்கு சென்று கர்ப்பகால பரிசோதனைகளான தொடர் எடை பதிவு, ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, நாடித்துடிப்பு ஆகியவற்றை கண்காணித்து பாதுகாப்பான தாய் சேய் நல சேவைகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாநகராட்சியில் உள்ள 16 ஆரம்ப சுகாதார நிலையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தர உறுதி சான்று பெற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 100 நகர்ப்புற செவிலியர்களுக்கு தாய் சேய் நல கண்காணிப்பு பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பெட்டகத்தில் உள்ள உபகரணங்கள் மூலம் கர்ப்பிணிகளின் வீடுகளுக்கு சென்று ரத்த அழுத்தம், எடை பதிவு, ரத்தத்தில் சர்க்கரைஅளவு நாடிதுடிப்பு ஆகியவற்றை கண்காணிக்கலாம். இதன்மூலம் அவர்கள் கர்ப்பிணிகளுக்கு சேவைகளை செய்து வருகின்றனர். மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதம் தோறும் 120 மூலம் 130 வரை சுகப்பிரவசங்கள் நடந்து வருகிறது,’’ என்றனர்.

The post 100 செவிலியருக்கு தாய்-சேய் நல கண்காணிப்பு பெட்டகம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Corporation ,
× RELATED இறைச்சி கடைகள் மூடல்