×

இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்கு எந்த சட்ட பிரிவின் கீழ் செந்தில்பாலாஜி தகுதியிழக்கிறார்? வழக்கு தொடர்ந்தவர்களிடம் நீதிபதிகள் கேள்வி

சென்னை: தண்டனை எதுவும் இல்லாதபோது எந்த சட்ட பிரிவின்கீழ் செந்தில்பாலாஜி தகுதி இழக்கிறார் என்று வழக்கு தொடர்ந்தவர்களிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல, செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சராக நீடிக்கிறார் என்று விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி கொளத்தூரை சேர்ந்த எஸ்.ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன் ஆகியோர் கோ-வாரண்டோ வழக்குகளையும் தொடர்ந்தனர்.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஜூன் 29ம் தேதி மாலையில் உத்தரவு பிறப்பித்த ஆளுநர், அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவை நிறுத்திவைப்பதாக எடுத்த முடிவை ரத்து செய்யக் கோரி எம்.எல்.ரவி மற்றொரு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஜெயவர்த்தன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி ஆஜராகி, ஒரு மாதத்துக்குமேல் காவலில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும்? என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் எனும்போது எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர், எம்.எல்.ஏ.வாக அவர் நீடிக்கலாம். ஆனால் எந்த துறையும் இல்லாமல் அமைச்சராக நீடிக்க முடியாது. அரசியலமைப்பு சரத்து பிரிவு 163 ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, செந்தில்பாலாஜி பதவியில் நீடிப்பதை ஏற்க முடியாது என்று ஆளுநர் கூறியிருக்கிறார். அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என்று அறிவிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது.

வழக்கு விசாரணையில் அவர் தலையிட வாய்ப்புள்ளது. எனவே, அவரை முதல்வரே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வாதிட்டார். எம்.எல்.ரவி தரப்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி, செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைக்க முடியாது. நீக்கத்துக்கும், அதை நிறுத்தி வைத்ததற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் எந்த பதவியிலும் இல்லை. அவருக்கு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை என்றார். இதையடுத்து தமிழ்நாடு அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரத்தின் வாதத்திற்காக விசாரணையை அடுத்த வாரத்துக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

The post இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த வழக்கு எந்த சட்ட பிரிவின் கீழ் செந்தில்பாலாஜி தகுதியிழக்கிறார்? வழக்கு தொடர்ந்தவர்களிடம் நீதிபதிகள் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Senthilbalaji ,CHENNAI ,High Court ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 33ஆவது முறையாக நீட்டிப்பு