×

மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் 15 ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைப்பு: போதை ஆசாமிகள் அட்டூழியம்

திருவொற்றியூர்: மாத்தூர் எம்எம்டிஏ பகுதிகளில் நேற்று நள்ளிரவில் மதுபோதையில் மர்ம நபர்கள், அங்கு நின்றிருந்த ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடிகளை அடித்து நொறுக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

சென்னை மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் 3 பிரதான சாலைகளும் 120க்கும் மேற்பட்ட குறுக்கு தெருக்களும் உள்ளன. இதனால் இப்பகுதியில் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும். இதற்கிடையே, கடந்த சில நாட்களாக மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் நள்ளிரவு நேரங்களில் மதுபோதையில் மர்ம ஆசாமிகளில் சிலர் சுற்றி வந்து, அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டு உள்ள ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடிகளை அடித்து உடைத்து நொறுக்கி வருகின்றனர்.

மேலும், மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் உள்ள பூங்கா, மற்றும் பயன்படுத்தப்படாத காலி கட்டிடங்களில் தங்கி மது அருந்துதல் மற்றும் கஞ்சா புகைப்பது உள்பட பல்வேறு சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு நள்ளிரவில் வேலை முடிந்து தனியே வீடு திரும்புபவர்களை போதை ஆசாமிகள் பணம் கேட்டு மிரட்டி தாக்குவது, அடிதடி தகராறிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் போலீசார் இரவுநேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 15க்கும் மேற்பட்ட ஆட்டோக்களின் முன்புற கண்ணாடிகளை கஞ்சா போதை ஆசாமிகள் அடித்து உடைத்து நொறுக்கினர். கண்ணாடி நொறுங்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்ததும் போதை ஆசாமிகள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, போதை ஆசாமிகளின் அட்டூழியத்தினால் ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இப்பகுதியில் போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அடாவடி செயல்களில் ஈடுபடும் போதை ஆசாமிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து மாதவரம் பால்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்த மர்ம ஆசாமிகளை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post மாத்தூர் எம்எம்டிஏ பகுதியில் 15 ஆட்டோக்களின் கண்ணாடிகள் உடைப்பு: போதை ஆசாமிகள் அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Mathur MMDA ,Tiruvottiyur ,Madhavaram ,Chennai ,Dinakaran ,
× RELATED மாத்தூர் எம்எம்டிஏ.வில் நள்ளிரவு 15...