×

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் கதவு மூடப்பட்டுள்ளதால் முதியவர்கள் அவதி

மாமல்லபுரம்: மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழ்ந்து வருகிறது. இக்கோயிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு, கிழக்கு, தெற்கு பகுதி என இரு நுழைவாயில் வழியாக பக்தர்கள் வந்து செல்லலாம். வடக்குபுற நுழைவாயில் திறந்த வெளியாக உள்ளது. இக்கோயிலில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்து, தற்போது வரை திருப்பணிகள் நடந்து வருகிறது.

இந்த திருப்பணிக்கு இடையூறு இல்லாத தெற்குபுற கதவை கடந்த ஓராண்டுக்கு முன்பு கோயில் நிர்வாகம் திடீரென பூட்டு போட்டு பூட்டினர். இன்னும் திறக்கவில்லை. இக்கோயிலின், கிழக்குபுற கதவும் சரியாக இல்லாததால் கோயிலுக்கு எந்த வழியாக செல்வது என்று பக்தர்கள் குழம்புகின்றனர். மேலும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பலர் பல ஆண்டுகளாக தெற்குபுற வழியை பயன்படுத்தி வந்தனர். இதனால் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களும் எவ்வித இடையூறும் இன்றி கோயிலுக்கு சென்று வந்தனர்.

இந்நிலையில் தெற்குபுற கதவை திறக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்துக்கு பல முறை பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுவரையில் திறக்கப்படவில்லை. கோயிலுக்கு வரும் முதியவர் ஒருவர் தெற்குபுற கதவுக்கு அருகே உள்ள மிக குறுகிய இடத்தில் வீல்சேரில் உட்கார வைத்து அழைத்து செல்லப்பட்டு வருகிறார். இதுபோன்று முதியவர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, மாற்றுத்திறனாளிகள், முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக தெற்குபுற கதவை திறந்தும், கிழக்கு நுழைவு வாயில் பகுதியை பக்தர்களுக்கு தெரியும் வகையில் பெரிய கதவு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் கதவு மூடப்பட்டுள்ளதால் முதியவர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Mamallapuram Thalasayana ,Perumal Temple ,Mamallapuram ,Thalasayana Perumal Temple ,Avadi ,
× RELATED ராமச்சந்திர பெருமாள் கோயிலில்...