சென்னை: தமிழ்நாடு அரசால் வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டம் விரைவில் நிறைவேற்ற வாய்ப்புள்ளது என்று ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் சமூகநீதி வரைபடத்தை தலைகீழாக மாற்றியமைத்த பெருமை கொண்ட வன்னியர் சங்கம் வரும் 20ம் தேதி 44ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பாட்டாளி சொந்தங்கள் செய்த தியாகங்களின் பயனாகத் தான் வன்னியர் உள்ளிட்ட 108 சமூகங்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை 1989ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞர் வழங்கினார்.
சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்குகளால் அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டாலும், தரவுகளை திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 31.3.2022 மார்ச் 31ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாடு அரசுக்கு இதுதொடர்பாக பலமுறை அழுத்தம் கொடுத்தோம். அதன் பயனாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களின் நிலை குறித்த புள்ளி விவரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வாங்கி பகுப்பாய்வு செய்து வருகிறது. இந்த பணிகள் இன்னும் சில வாரங்களில் நிறைவடைந்தால், அடுத்த சில வாரங்களில் வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டு விடும் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post வன்னியர் இடஒதுக்கீட்டு சட்டம் விரைவில் நிறைவேற்ற வாய்ப்பு: ராமதாஸ் நம்பிக்கை appeared first on Dinakaran.