×

திருவக்கரை அருகே பட்டப்பகலில் வீட்டை உடைத்து 12 பவுன் நகை துணிகர கொள்ளை

வானூர், ஜூலை 16:வீட்டின் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா திருவக்கரை அருகே உள்ள நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம்(38). லாரி ஓட்டுநராக உள்ளார். இவரது மனைவி காயத்திரி(32). இருவரும் நேற்று முன்தினம் பகல் 12 மணியளவில் தங்களது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் புதுவை மாநிலம் திருக்கனூரில் உள்ள மருத்துவரிடம் அழைத்து சென்றுவிட்டு சிகிச்சை முடிந்த நிலையில், மீண்டும் மாலை 4 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து செல்வம் வானூர் போலீசில் புகார் அளித்ததார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரத்தில் இருந்து கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். தம்பதியினர் வெளியில் சென்றதை நோட்டமிட்டு, அப்பகுதியை சேர்ந்தவர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேத்தின்பேரில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருவக்கரை அருகே பட்டப்பகலில் வீட்டை உடைத்து 12 பவுன் நகை துணிகர கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Thiruvakkarai ,Vanur ,Thiruvakarai ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் கிடைக்கும்...