×

இரணியல் அருகே 3 பேர் தற்கொலை ஏன்? உடல்களை பெற்று செல்ல உறவினர்கள் யாரும் வரவில்லை

திங்கள்சந்தை : இரணியல் அருகே ஆழ்வார்கோயில் தாந்தவிளையில் உள்ள ராஜகோபால் என்பவரது வீட்டில் பாபு என்பவர் 8 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வந்தார். இவர் பெயின்டிங் வேலைக்கு சென்று வந்தார். அவருடன் அவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷாபார்வதி (38) ஆகியோரும் குடியிருந்து வந்தனர். 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அவர்கள் தங்கி இருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவலின் பேரில் குளச்சல் டிஎஸ்பி தங்கராமன், இரணியல் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பாபு, ஸ்ரீதேவி ஆகியோர் தூக்கில் தொங்கி அழுகிய நிலையில் கிடந்தனர். மற்றொரு சகோதரி உஷா பார்வதி உடல் அழுகிய நிலையில் தரையில் கிடந்தது. திங்கள்கிழமை மாலை 3 பேரும் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். 3 உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

உஷாபார்வதி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் உஷாபார்வதி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணத்தில் மரணம் அடைந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய சொந்த ஊர் எது என்பது குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிந்த பின்னரும் உடல்களை பெற யாரும் வரவில்லை. இதனால் மூவர் உடல்களும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.இவர்கள் எந்த இடத்தை சேர்ந்தவர்கள், மரணத்திற்கான காரணங்கள் என்ன? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை

பாபு பண விஷயத்தில் கறாராக இருந்து வந்ததாக தெரிகிறது. மாதா மாதம் வாடகை பணத்தை சரியாக கொடுத்து வந்து உள்ளார். அதேபோன்று பாபுவும் அவரது சகோதரிகளும் கடவுள் பக்தி மிக்கவர்களாக இருந்து உள்ளனர். அவர்களது வீட்டில் ஏராளமான சாமி படங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி வந்து உள்ளனர். பாபு கழுத்தில் அதிக அளவில் ருத்திராட்ச மாலை அணிந்து இருந்தார். அவர்கள் ஜோதிடத்திலும் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

The post இரணியல் அருகே 3 பேர் தற்கொலை ஏன்? உடல்களை பெற்று செல்ல உறவினர்கள் யாரும் வரவில்லை appeared first on Dinakaran.

Tags : Iranial ,Babu ,Rajagopal ,Thandavilai ,Alvarkoil ,
× RELATED இரணியல் அருகே நள்ளிரவில் குளத்தில் கவிழ்ந்த லாரி