×

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்த எஸ்.வி.சேகர் மனு தள்ளுபடி..!!

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்த எஸ்.வி.சேகர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். இதை தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் புகாரளித்திருந்தார்.

அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் போலீசார் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். கடந்த 2020ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தவறான தகவல் தெரிவித்தும், தேசிய கோடியை அவமதிக்கும் வகையிலும் யூயுடியூப்பில் வீடியோ வெளியிட்டதாக எஸ்.வி.சேகர் எதிராக ராஜரத்தினம் என்பவர் அளித்த புகாரிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த இரண்டு வழக்குகளும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ மீதான வழக்குகளை விசாரிக்கக்கூடிய சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றபோது எஸ்.வி.சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தனது பதிவுகளை உடனடியாக நீக்கியதோடு தனது செயலுக்கு எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரி இருந்ததாக அவர் தரப்பில் வழக்கறிஞர் வாதித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஒரு தவறான மற்றும் அவதூறான கருத்துகளை தெரிவித்துவிட்டு உடனடியாக மன்னிப்பு கூறிவிட்டாள் அந்த செயல்பாடுகளில் தவறில்லை என ஆகிவிடுமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில் இந்த இரண்டு வழக்குகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் இன்று காலை இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கினார் . பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்த எஸ்.வி.சேகர் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தேசிய கோடி அவமதிப்பு தொடர்பான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பாதிப்பு ஏற்படுத்தியதை மன்னிப்பு மூலம் சரிகட்டிவிட முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். தனக்கு வந்த தகவலை ஃபார்வர்டு செய்பவரே அதனால் ஏற்படும் பாதிப்புக்கு முழு பொறுப்பு ஆவார். எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த ஆதாரங்களை ஏற்க வேண்டுமா, வேண்டாமா என்பதை சிறப்பு நீதிமன்றமே முடிவு செய்யும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கக்கூடிய சிறப்பு நீதிமன்றம் வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

 

The post பெண் பத்திரிகையாளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு தொடர்பான வழக்கை எதிர்த்த எஸ்.வி.சேகர் மனு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : S.S. ,CV Sekar ,Chennai ,SW ,Dinakaran ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...