×

எம்எல்ஏ விழாவில் குண்டு வீச்சு 2 பேரை பிடித்து தனிப்படை விசாரணை

கடலூர்: கடலூர் அருகே சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கலந்துகொண்ட விழாவில் மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் அடைக்கப்பட்ட பாட்டில் குண்டு வீசி தப்பி சென்றனர். இதுதொடர்பாக பாப்கார்ன் வியாபாரிகள் இருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் தொகுதி எம்எல்ஏ ஐயப்பன் நேற்று இரவு கடலூர்-புதுச்சேரி எல்லையில் உள்ள நல்லாத்தூர் கிராமத்தில் திமுக நிர்வாகி மணி இல்ல மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொள்ள ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார். மண்டபத்தின் உள்ளே சென்ற சில விநாடிகளில் திடீரென மண்ணெண்ணெய் அடைக்கப்பட்ட பாட்டில் குண்டு ஒன்று மண்டபத்தின் வெளியே இருந்து வீசப்பட்டது. மண்டபத்தின் வரவேற்பு பகுதியில் உள்ள இடத்தில் பாட்டில் குண்டு விழுந்ததால் ஐயப்பன் எம்எல்ஏ மற்றும் திமுகவினர் விழாவில் கலந்துகொள்ள வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இச்சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேற்றிரவு முதல் விடிய விடிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் பைக்கில் வந்ததாக தெரிகிறது. எனவே வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடலூர் செம்மண்டலம் தவுலத் நகரில் வசித்து வரும் ஐயப்பன் எம்எல்ஏ வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே மஞ்சள் நீராட்டுவிழா நடந்த மண்டபத்தில் பாப்கார்ன் விற்பனை செய்த இடத்தின் அருகே மண்ணெண்ணெய் குண்டு விழுந்ததால் விழுப்புரத்தை சேர்ந்த பாப்கார்ன் வியாபாரிகள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post எம்எல்ஏ விழாவில் குண்டு வீச்சு 2 பேரை பிடித்து தனிப்படை விசாரணை appeared first on Dinakaran.

Tags : MLA ,Cuddalore ,legislator ,Ayyappan ,
× RELATED அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதால்...