×

கம்பெனி ஊழியரை கத்தியால் வெட்டி நகை பறித்ததை வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்கள்: பிடிக்க முயன்ற போலீசாரை வெட்ட முயன்றனர்

* பள்ளிக்கரணையில் நள்ளிரவு பரபரப்பு சம்பவம்

தாம்பரம்: மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர், பள்ளிக்கரணையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு இவர், வேலை முடிந்ததும், தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் பைக்கில், பள்ளிக்கரணை ஏரிக்கரை சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த 3 போதை ஆசாமிகள், கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அப்போது சதீஷ், தங்களிடம் பணம் இல்லை என கூறியபடி, அங்கிருந்து செல்ல முயன்றார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், சதீஷை கத்தியால் வெட்டினர். பின்னர், அவர் அணிந்திருந்த 2 மோதிரங்களை பறித்தனர். மேலும், இதனை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து, படுகாயமடைந்த சதீஷை, நண்பர் வெங்கடேஷ் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும், இதுபற்றி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில், பள்ளிக்கரணை போலீசார் அந்த 3 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் பள்ளிக்கரணை காமகோடி நகர் பிரதான சாலையில், 3 பேர் கையில் கத்தியுடன் ஒருவரை துரத்திக்கொண்டு செல்வதாக, பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, அந்த 3 பேர், அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், அப்பகுதி முழுவதும் தேடியபோது, அந்த 3 பேர், ஒரு இடத்தில் கத்தியுடன் படுத்துக்கொண்டு இருப்பதை பார்த்து, அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது, அவர்கள் கத்தியை காட்டி போலீசாரை மிரட்டியுள்ளனர். இதனால் ரோந்து போலீசார், பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், 10க்கும் மேற்பட்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது, அவர்களில் ஒருவன் மதில் சுவரை தாண்டி குதித்து தப்ப முயன்றபோது, தடுமாறி விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவன் உள்பட மூவரையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில், காரணை பகுதியை சேர்ந்த விக்னேஷ் (23), பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கிங்ஸ்லி பால் (20), விஷ்ணு (22) ஆகியோர் என்பதும், தனியார் கம்பெனி ஊழியரை கத்தியால் வெட்டி, நகை பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. இதில், விக்னேஷ் மற்றும் கிங்ஸ்லி பால் இருவரும் ஏற்கனவே கொலை வழக்கில் சிறை சென்றதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 தங்க மோதிரம் மற்றும் கத்தியை பறிமுதல் செய்தனர். இதனிடையே, எலும்பு முறிவு ஏற்பட்டவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும், அவர்களிடம் இருந்த செல்போனை சோதனை செய்தபோது, தனியார் கம்பெனி ஊழியர் சதீஷ்குமாரை கத்தியால் வெட்டி, நகை பறித்ததை வீடியோ எடுத்ததும், பின்னர், மீண்டும் மது அருந்தி, ஆடி பாடியதுடன் அதையும் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளத்தில் ரீல்ஸ் வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கம்பெனி ஊழியரை கத்தியால் வெட்டி நகை பறித்ததை வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்கள்: பிடிக்க முயன்ற போலீசாரை வெட்ட முயன்றனர் appeared first on Dinakaran.

Tags : Pallikaranai Tambaram ,Satish Kumar ,Medavakkam ,Pallikaranai ,
× RELATED அனுமதியின்றி இ-சேவை மையம்: போலி ஆவணங்கள் தயாரித்தவர் கைது