சென்னை: சென்னை-யாழ்ப்பாணம்-சென்னை இடையே வாரத்துக்கு 4 நாள் இயக்கப்பட்ட விமான சேவைகள், வரும் 16ம் தேதி ஞாயிறு முதல், தினசரி விமான சேவைகளாக இயக்கப்பட உள்ளன. இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள தமிழர்கள், தமிழக தமிழர்கள், தமிழ் அமைப்புகள் யாழ்ப்பாணம் டூ சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ஏர் இந்தியாவின் சக நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டில் இருந்து, சென்னை-யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவையை தொடங்கியது.
ஆனால் கொரோனா காலத்தில் அந்த விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. அப்போது, சென்னை-யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. எனினும், கொரோனா கால முடிவுக்கு பிறகு, சென்னை-யாழ்ப்பாணம் இடையே நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கவில்லை. சென்னை- யாழ்பாணம் விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து கடந்த, 2022 ஆண்டு டிசம்பர் 12 ம் தேதியில் இருந்து, அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம், சென்னை-யாழ்ப்பாணம்-சென்னை இடையே வாரத்தில் 4 நாட்கள் விமான சேவையை மீண்டும் தொடங்கியது. திங்கள்,செவ்வாய், வியாழன், சனி ஆகிய 4 நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த விமான சேவைக்கு இலங்கை மற்றும் இந்தியாவில் பெருமளவு வரவேற்பு இருக்கிறது. அதோடு சுற்றுலா பயணிகளும், இந்த விமானத்தில் அதிக அளவில் யாழ்ப்பாணம் சென்று வருகின்றனர். இதனால் இந்த விமானத்தை தினசரி விமானமாக, சென்னை-யாழ்ப்பாணம்-சென்னை இடையே இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து அலையன்ஸ் ஏர் விமான நிறுவனம், வருகின்ற 16 ஆம் தேதி ஞாயிறு முதல், இந்த விமானத்தை தினசரி விமானமாக இயக்க இருப்பதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தினமும் காலை 9:35 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம், காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம் சென்றடையும். பின்பு பகல் 12:00 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு, பிற்பகல் 1:25 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள், அதோடு சுற்றுலாப் பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post சென்னை டூ யாழ்ப்பாணத்துக்கு கூடுதல் விமானம்: இலங்கை தமிழர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.
