×

பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை

பெரியபாளையம்: பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் ஆனி மாதம் குரு பவுர்ணமியை முன்னிட்டு 108 பெண்கள் திருவிளக்கு பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை இரவு தங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பொங்கல் வைத்து, மொட்டை அடித்து, அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆனி மாதம் குரு பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பொதுமக்கள் நோயின்றி வாழவும், 108 பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையில் பங்கேற்ற பெண்கள் குத்து விளக்கேற்றி குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். முன்னதாக பவானி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு வாசனைத் திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் உற்சவர் வெள்ளி அலங்காரத்தில் கோயிலை 3 முறை சுற்றி தேர் பவனி வந்தார். இந்நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் அஞ்சன் லோகமித்ரா, மற்றும் செயல் அலுவலர் பிரகாஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

The post பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Thiruvilakku Pooja ,Bhavani Amman temple ,Periyapalayam ,Guru Poornami ,Ani ,
× RELATED பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு...