×

சமூக வலைத்தளங்களில் பதிவிட மதுரை – நத்தம் மேம்பாலத்தில் லைக் எதிர்பார்த்து பைக் ரேஸ்: போலீசார் எச்சரிக்கை

மதுரை: மதுரை – நத்தம் சாலை மேம்பாலத்தில் வலைத்தளங்களில் பதிவிட்டு லைக் பெற இளைஞர்கள் பைக் ரேஸ் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரித்துள்ளனர். மதுரை – நத்தம் சாலையில் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கி.மீ தொலைவிற்கு பறக்கும் பாலம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். ரூ.615 கோடி செலவில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ள இந்த பறக்கும் பாலத்தில் ஐயர் பங்களா, திருப்பாலை பகுதிகளில் இறங்குவதற்கு வசதியாக சர்வீஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளுக்கும், நத்தம் உள்ளிட்ட வெளியூர்களுக்கும் செல்லும் கார் மற்றும் டூவீலர் வாகனங்கள் பகல் நேரங்களில் அதிக அளவில் செல்லுகிறது.

ஆனால், இரவு நேரங்களில் சொற்ப அளவிலேயே வாகனங்கள் செல்கின்றன. இதனால் பறக்கும் மேம்பால பகுதிகளில் அடிக்கடி சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும் பொது மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொள்கின்றனர். பறக்கும் மேம்பாலத்தில் குறைந்த அளவே வாகனங்கள் செல்வதால் சாலைகளில் சாகசம் செய்பவர்களின் அட்டகாசமும் அவ்வப்போது அறங்கேறி வருகிறது. அதிவேகத்தில் பைக் ரேஸ் சென்று அந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதிக ‘லைக்’ குகளை பெறுவதும் இளசுகளின் கனவாக உள்ளது. இளம்பெண்களும் பாலத்தின் மையப் பகுதிகளிலிருந்து நடனமாடி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் சமீப காலமாக டிரெண்டாகி வருகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை போலீசார் கடுமையாக எச்சரித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் நத்தம் மேம்பாலத்தில் 4 டூவீலர்களில் வாலிபர்கள் அதிவேகத்தில் சைரன் ஒலிக்க முன்பக்க சக்கரத்தை உயர்த்தியபடி சென்று சாகசம் என்ற பெயரில் அபாயகரமான பைக் ரேஸில் ஈடுபட்டனர்.
இது அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்களை கடும் பீதிக்குள்ளாக்கியது.

இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீசார் வருவதற்குள் பைக் ரேஸ் இளைஞர்கள் மாயமாகினர். இதனால் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இதுபோன்ற பைக் ரேஸ் இளைஞர்களை போலீசார் எச்சரித்துள்ளனர். போலீசார் கூறும்போது, ‘நத்தம் மேம்பாலத்தில் பைக் ரேஸ் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி மேம்பாலத்தில் தேவையின்றி வாகனங்களை நிறுத்துவது, பாலத்தின் மேலே நின்று செல்பி எடுப்பது, வாகனங்களில் அதிவேகமாக சாகசம் என்ற பெயரில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது, பாலத்தின் மேலே அமர்ந்து கொண்டு கேக் வெட்டுவது, பாலத்தின் இருபுறங்களில் உள்ள பக்கவாட்டு சுவரில் அமர்ந்து பொழுது போக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

The post சமூக வலைத்தளங்களில் பதிவிட மதுரை – நத்தம் மேம்பாலத்தில் லைக் எதிர்பார்த்து பைக் ரேஸ்: போலீசார் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Bike Race ,Natham ,Natham Road ,Nannam ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை