அரக்கோணம்: கனமழை எச்சரிக்கை எதிரொலியாக 40 தேசிய பேரிடம் மீட்பு படை வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து நீலகிரிக்கு விரைந்து சென்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை மையம் உள்ளது. இங்கு, இயற்கை இடர்பாடு உள்ளிட்ட பல்வேறு மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக வீரர்கள் எப்போதும் நவீன உபகரணங்களுடன் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையொட்டி, நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும் இப்பணிகளில் ஈடுபடுவதற்காக, தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டன்ட் பிரவீன் பிரசாத் தலைமையில், தலா 20 வீரர்கள் கொண்ட 2 குழுவினர் என மொத்தம் 40 வீரர்கள் நேற்று நீலகிரி மாவட்டத்திற்கு விரைந்து சென்றனர். இவர்கள், அதிநவீன தொலைத்தொடர்பு சாதனங்கள், ரப்பர் படகு, மரம் வெட்டும் கருவிகள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்தும் மீட்பு உபகரணங்கள் உள்ளிட்டவைகளை எடுத்துக்கொண்டு டிரக் மூலம் சென்றனர்.
The post கனமழை எச்சரிக்கை எதிரொலி நீலகிரிக்கு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 40 பேர் விரைவு: அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டனர் appeared first on Dinakaran.
