சென்னை: சென்னை பெருநகரில்,“சாகர் கவாச்-2023” என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகையின்போது, சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளே நுழைய முயன்ற 11 நபர்கள் பிடிபட்டனர். கடலோர பாதுகாப்புப் படை மற்றும் சென்னை பெருநகர காவல் துறையினர் இணைந்து ‘சாகர் கவாச்-2023 (SAGAR KAVACH-2023’ என்ற பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கை சென்னையில் இன்று காலை தொடங்கி 2 நாட்கள் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
கடலோர பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு துறையினர் ஒருங்கிணைந்து இப்பாதுகாப்பு ஒத்திகையினை நடத்தி வருகிறார்கள். இப்பாதுகாப்பு ஒத்திகை சம்பந்தமாக கூடுதல் காவல் ஆணையாளர்கள், இணை ஆணையாளர்கள் மற்றும் துணை ஆணையாளர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விரிவான அறிவுரைகளை வழங்கி ஒத்திகையினை மேற்பர்வையிட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் கூடுமிடங்கள், உயர் மட்டப் பாதுகாப்பு நிலைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் காவல் அதிகாரிகளின் கண்காணிப்பில் காவலர் குழுவினர் தணிக்கைப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகனசோதனை மற்றும் ரோந்துப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
நேற்று காலை முதல் சென்னையில் நடைபெற்று வரும் இப்பாதுகாப்பு ஒத்திகையின்போது, சென்னை பெருநகர காவல், D-5 மெரினா காவல் நிலைய எல்லையில் 3 நபர்கள், J-6 திருவான்மியூர் காவல் நிலைய எல்லையில் 2 நபர்கள், N-4 மீன்பிடி காசிமேடு துறைமுகம் காவல் நிலைய எல்லையில் 3 நபர்கள் மற்றும் B-5 துறைமுகம் காவல் நிலைய எல்லையில் 3 நபர்கள் என சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற மொத்தம் 11 நபர்களை காவல் குழுவினர் மடக்கி பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். சாகர் கவாச்-2023 பாதுகாப்பு ஒத்திகையானது தொடர்ந்து இன்று மாலை வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post “சாகர் கவாச்-2023” கடலோர பாதுகாப்பு ஒத்திகையின் போது பாதுகாப்பு வளையத்தை மீறி உள்ளே நுழைய முயன்ற 11 நபர்கள் கைது..!! appeared first on Dinakaran.