×

தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: ஏழை எளிய மக்களுக்கு குர்பானி வழங்கினர்

சென்னை: பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏழை எளிய மக்களுக்கு குர்பானி வழங்கப்பட்டது. தியாகத்தை போற்றும் பக்ரீத் திருநாள் இஸ்லாமிய மக்களால் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை வழக்கமான உற்சாகத்துடன் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. பக்ரீத் திருநாளையொட்டி பள்ளி வாசல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.

சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜாமியா மசூதியில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொழுகைக்கு பிறகு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் உரையாற்றினார். சென்னை பிராட்வே டான்போஸ்கோ பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். தொழுகைக்கு பிறகு மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ உரையாற்றினார். இதேபோல், சென்னை தீவுத்திடல், திருவல்லிக்கேணி பெரிய மசூதி, பெரியமேடு மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து பங்கேற்றனர். சிறப்பு தொழுகை முடிந்தவுடன் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகளையும் வழங்கினர். பக்ரீத் பண்டிகை நன்னாளில் இறை தூதர் நபியின் வழியில் ஆடு, மாடு உள்ளிட்டவற்றை குர்பானி எனப்படும் புனித பலி கொடுப்பது வழக்கம்.

இதன்படி தொழுகையை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்தனர். இவற்றில் 3ல் 2 பங்கை ஏழைகளுக்கு கொடுத்தனர். இதுமட்டுமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு மதியம் பிரியாணி விருந்து படைத்தனர். பக்ரீத் தொழுகை நடந்த அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள ஜாமியா மசூதியில் நடந்த சிறப்பு தொழுகைக்கு பின்னர், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபுபக்கர் அளித்த பேட்டி: தியாகத்திருநாளில் இந்த நாட்டிற்கு அன்பும் அமைதியும் சமாதானமும் சகோதரத்துவமும் இன்றியமையாத தேவை என்பதை மனதில் நிறுத்துவோம். இந்த நல்ல நாளில் அனைத்து இஸ்லாமிய மக்களும் தங்களின் இல்லங்களில் பிரியாணி சமைத்து நண்பர்களாக இருக்கும் அனைத்து சமுதாய மக்கள் இல்லங்களுக்கு சென்று கொடுத்து பக்ரீத் திருநாளை கொண்டாடினர். இவ்வாறு அவர் கூறினார். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நேற்று சென்னையில் உள்ள அனைத்து பிரியாணி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சென்றனர். மேலும் நண்பர்களுக்கும் பிரியாணியை வாங்கி கொடுத்து மகிழ்ந்தனர்.

The post தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: ஏழை எளிய மக்களுக்கு குர்பானி வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Kolakala ,Tamil Nadu ,Bakreet ,Chennai ,Pakreet ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...