பெரம்பூர்: பெரம்பூர் ஆண்டியப்பன் தெருவை சேர்ந்தவர் சபீர் அலி (20). இவர் அதே பகுதியில் உள்ள சலூனில் முடித்திருத்தும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் ஒரு செல்போன் எண்ணில் இருந்து, இவரது செல்போனை தொடர்பு கொண்ட மர்ம நபர், ‘‘நான் கோட்டக் மகேந்திரா வங்கியில் இருந்து பேசுகிறேன். உங்களுக்கு வங்கியில் இருந்து ஏடிஎம் கார்டு வந்துள்ளது. இதனை ஆன்லைனில் பெற்று தருகிறேன்,’’ என தெரிவித்துள்ளார்.
மேலும், இதற்காக சபீர் அலியின் கிரெடிட் கார்டு நம்பர் மற்றும் ஓடிபி உள்ளிட்டவற்றை கேட்டுள்ளார். சபீர் அலியும் தனது கிரெடிட் கார்டு நம்பர் மற்றும் ஓடிபியை கூறியுள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் இவரது கிரெடிட் கார்டில் இருந்து ரூ.79 ஆயிரம் எடுக்கப்பட்டதாக சபீர் அலிக்கு மெசேஜ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் குறிப்பிட்ட அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சபீர் அலி நேற்று இதுகுறித்து திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், இந்த வழக்கை சைபர் கிரைம் போலீசாருக்கு மாற்றி உள்ளனர். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து, பண மோசடி செய்த அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.
செல்போன் மூலம் பேசும் மர்ம நபர்களிடம் வங்கி சம்பந்தமான எந்த ஒரு விஷயத்தையும் ஷேர் செய்ய வேண்டாம் என காவல்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து பொதுமக்கள் இது போன்ற விஷயங்களில் ஏமாறுவது தொடர்கதையாகி வருகிறது.
The post ஏடிஎம் கார்டு வந்துள்ளதாக கூறி வாலிபரிடம் ரூ.79 ஆயிரம் அபேஸ்: மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.