×

ஆளுநருக்கு கடும் கண்டனம் சனாதனம், மதவெறியை எதிர்த்தவர் வள்ளலார்: பாலகிருஷ்ணன் பேட்டி

தஞ்சாவூர்: ‘சனாதனம், மதவெறி, சாதி பேதத்தை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார்’ என்று பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தஞ்சாவூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று அளித்த பேட்டி: வள்ளலார் குறித்து தமிழ்நாடு ஆளுநர் கூறிய கருத்து அவரை இழிவுபடுத்துவதாக உள்ளது. சனாதனம், மதவெறி, சாதி பேதம் போன்றவற்றை கடுமையாக எதிர்த்தவர் வள்ளலார். இந்நிலையில், சனாதனத்தின் உச்சம் வள்ளலார் எனக்கூறி அவர் மீது காவியை போர்த்தியுள்ளார். இந்தியாவை பற்றி காரல் மார்க்ஸ் தவறாக பேசியிருப்பதாக ஆளுநர் கூறியிருப்பது கண்டனத்திற்குரியது. இந்த மாதிரியான போக்கை ஆளுநர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ஆளுநரை எதிர்த்து மிகப்பெரிய இயக்கம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.

2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜ மிகப்பெரிய தோல்வியை தழுவ உள்ளது. பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நலன் புறக்கணிப்பு, மாநில சுயாட்சிக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்பு போன்ற கொள்கைகளில் ஈடுபடும் பாஜவுடன் துணை போவது தமிழ்நாட்டுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம். அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறையில் ரூ.122 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் தகவல் சேகரித்து கூட்டுறவுதுறை அமைச்சரிடம் வழங்கியுள்ளது. இந்த மிகப்பெரிய முறைகேடு குறித்து தமிழக அரசு, குழு அமைத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.குறுவை சாகுபடிக்கு கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் மட்டுமல்லாமல், தேவையான அளவுக்கு பயிர் கடனும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆளுநருக்கு கடும் கண்டனம் சனாதனம், மதவெறியை எதிர்த்தவர் வள்ளலார்: பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Sanathanam ,Vallalar ,Balakrishnan ,Thanjavur ,Marxist-Communist Party ,
× RELATED கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர்...