வூக்சி: ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை தமிழ்நாட்டின் பவானி தேவி வசப்படுத்தியுள்ளார். சென்னையை சேர்ந்த சந்தலவதா பவானி தேவி (29 வயது), ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்கு தேர்வான முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘சுற்று 32’ உடன் பவானி வெளியேறினார். இந்நிலையில், சீனாவின் வூக்சி நகரில் நடந்து வரும் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் சேபர் பிரிவு காலிறுதியில் நேற்று களமிறங்கிய பவானி ஜப்பான் வீராங்கனை மிசாகி எமுராவுடன் மோதினார்.
அந்த போட்டியில் அபாரமாக செயல்பட்ட பவானி 15-10 என்ற புள்ளிக் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அடுத்து உஸ்பெகிஸ்தானின் ஜேனப் டயிபெகோவாவுடன் மோதிய அரையிறுதியில் 14-15 என்ற புள்ளிக் கணக்கில் கடுமையாகப் போராடி தோற்றாலும், 3வது இடத்தை உறுதி செய்து வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறையும் படைத்துள்ளார்.
The post ஆசிய வாள்வீச்சில் பதக்கம் வென்று பவானி தேவி சாதனை appeared first on Dinakaran.