×

திருவெண்ணெய்நல்லூர் அருகே பிள்ளைகள் கவனிக்காததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை

 

திருவெண்ணெய்நல்லூர், ஜூன் 19: திருவெண்ணெய்நல்லூர் அருகே பெற்ற பிள்ளைகள் கவனிக்காததால் மனமுடைந்த வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் ஊராட்சி பழையபட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (80), விவசாயி. இவருடைய மனைவி லட்சுமி (75). இவர்களுக்கு ராஜேந்திரன், முருகன் ஆகிய 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். 4 பேருக்கும் திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

நடராஜனும், லட்சுமியும் பழையபட்டணம் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக நடராஜனால் விவசாயம் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக அவர்களின் மருத்துவ செலவு மற்றும் சாப்பாடு உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர். பெற்ற பிள்ளைகளிடம் உதவி கேட்டும் அவர்கள் பண உதவி செய்யவில்லையாம். இதனால் 4 பிள்ளைகள் இருந்தும் அவர்கள் கவனிக்கவில்லையே என்ற மனஉளைச்சலுடன் தம்பதி இருந்தனர்.

மனம் உடைந்த தம்பதியினர் கடந்த 16ம் தேதி விஷத்தை குடித்து ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்தனர். இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி லட்சுமி கடந்த 16ம் தேதி இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடராஜனும் நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருவெண்ணெய்நல்லூர் அருகே பிள்ளைகள் கவனிக்காததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tiruvenneynallur ,Thiruvenneynallur ,
× RELATED மதுபோதையில் தந்தையைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகன் கைது