- அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து
- தவளக்குப்பம்
- அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம்
- தின மலர்
தவளக்குப்பம், ஜூன் 13: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டினர். புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்தில் ஒர்க்கர்ஸ் யூனியன் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2 பிளம்பர் பதவிகள் காலியாக இருந்தது. அப்பகுதியை பிளம்பர் பிரிவில் 1993ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த சங்கத்தின் உறுப்பினர் ராஜேந்திரன் 2015ம் ஆண்டு முதல் பொறுப்பு பிளம்பராக இரண்டு பதவிகளையும் சேர்த்து பார்த்து வந்தார். எனவே அவருக்கு பிளம்பராக பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கையை புறந்தள்ளிவிட்டு அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம், வெளியிலிருந்து பிளம்பர் பதவியை நிரப்புவதாக அறிவிப்பு வெளியிட்டது. ராஜேந்திரனுக்கு பிளம்பர் பதவி வழங்க வேண்டும் என்று கடந்த 2017ம் ஆண்டு தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை. அதனால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று புதுச்சேரி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் சங்கத்தின் சார்பில் கடந்த 2022ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மாவட்ட நீதிமன்றத்தில் எவ்வித உத்தரவை பிறப்பிக்க கூடாது என அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுச்சேரி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு ஜப்தி நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை நீதிமன்றத்தின் மூலம் கோர்ட் அமினா அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஜப்தி நடவடிக்கையை மேற்கொண்டார். அங்குள்ள வாகனம், கணினி பொருட்கள் உள்ளிட்டவற்றின் மீது ஜப்தி நடவடிக்கைக்கான கோர்ட் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதற்கிடையே கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், ஜப்தி நடவடிக்கையை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்காக சென்னை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
The post நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் ஜப்தி appeared first on Dinakaran.