டோக்கியோ: ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியது. இதில் புகுஷிமாவில் உள்ள டாய்ச்சி அணு உலைக்குள் கடல்நீர் புகுந்தது. இதன் காரணமாக மின்உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்தன. 6 யூனிட்களில் 3 யூனிட்கள் சேதமடைந்தது. இந்நிலையில் புகுஷிமா அணு உலையில் அணு கழிவுகளை பாதுகாப்பாக அகற்றிவிட்டு அணுஉலையை செயலிழக்க செய்யும் பணியில் டெப்கோ நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அணு கழிவுகள் நிறைந்த கழிவு நீர்சுத்திகரிக்கப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கழிவுநீரை கடலில் திறந்து விடுவதற்கு ஜப்பான் அரசுமுடிவு செய்துள்ளது.
கழிவுநீரை வெளியேற்றுவதற்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள கருவிகளின் செயல்பாடுகள் நேற்று சோதனை செய்யப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீருக்கு பதிலாக நன்னீரை பயன்படுத்தி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. புதிதாக கட்டப்பட்டுள்ள பம்புகள் மற்றும் அவசர காலத்தில் தண்ணீர் வெளியேறுவதை தடை செய்யும் உபகரணங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. கடலுக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதையின் மூலமாக கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் கடலில், அணு உலையில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த சோதனை இரண்டு வார காலத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த திட்டத்திற்கு அண்டை நாடுகள் மற்றும் மீன்பிடி சமூகத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
The post புகுஷிமா அணுஉலையில் கழிவுநீர் வெளியேற்றும் சோதனை தொடக்கம் appeared first on Dinakaran.