×

ரயில்வே கூட்டு விசாரணை குழு அறிக்கை தாக்கல்; சிக்னல் கோளாறால் ரயில் விபத்து ஏற்படவில்லை: 5 பேர் கொண்ட குழுவில் ஒரு பொறியாளர் மாறுபட்ட கருத்து

புதுடெல்லி: ஒடிசா ரயில் விபத்து குறித்து ரயில்வே கூட்டு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், சிக்னல் கோளாறால் ரயில் விபத்து ஏற்படவில்லை என்று, 5 பேர் குழுவில் இடம்பெற்ற ஒரு பொறியாளர் மாறுபட்ட கருத்து ெதரிவித்துள்ளார். ஒடிசாவின் பாலசோரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஆய்வு செய்துவிட்டு டெல்லி திரும்பிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே அதிகாரிகளுடன் நேற்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். ரயில்வே வாரிய அதிகாரிகளுடனான இரண்டு மணி நேர ஆலோசனையில், விபத்து தடுப்பு நடவடிக்கை மற்றும் நவீன தொழில்நுட்பம் குறித்த செயல்திட்டம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டி ஒன்றில், ‘ரயில் விபத்துக்கு காரணம் ‘எலக்ட்ரானிக் இன்டர்லாக் சிஸ்டம்’ மாற்றியமைக்கப்பட்டது தான். ரயில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ஒடிசா விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் கூட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணை அறிக்கையானது, ரயில்வே அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த கூட்டு விசாரணை அறிக்கையில், விபத்துக்கு காரணம் சிக்னல் பிரச்னை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் கூட்டு விசாரணை அறிக்கையில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான மூத்த ரயில்வே பொறியாளர், சிக்னல் காரணத்தை மறுத்துள்ளார்.

அவர், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், லூப் லைனில் அந்த ரயில் செல்வதற்கான பச்சை நிற சிக்னல் எப்படி கிடைத்தது? எனவே, சிக்னல் கோளாறால் ரயில் விபத்து ஏற்படவில்லை என்று கூறிள்ளார். எனவே கூட்டு விசாரணை அறிக்கையில், 5 பேர் கொண்ட ரயில்வே பொறியாளர்கள் குழுவின் மத்தியில் இருவேறு கருத்துகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், ‘விபத்து குறித்த கூட்டு விசாரணைக்குழுவின் அறிக்கையில், வெவ்வேறு துறைகளுக்கு இடையே கருத்து வேறுபாடு இருப்பது இயல்பானது தான். ஏனெனில் ஒவ்வொரு துறையினரும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் விபத்தை அணுகி இருப்பார்கள். ரயில் பாதுகாப்பு ஆணையரின் விசாரணை முடிந்த பின்னர் தான், இறுதி முடிவு எடுக்க முடியும்.

அதுவரை காத்திருக்க வேண்டும். ‘டேட்டாலாக்கர்’ என்பது நுண்செயலி அடிப்படையிலான தொழில்நுட்ப கருவி அமைப்பாகும். இது ரயில்வே சிக்னல் அமைப்பைக் கண்காணிக்கிறது. அதாவது ரயில்கள் செல்லும் பாதையின் தரவுகளை ஸ்கேன் செய்து சேமித்து வைத்திருக்கும். அதேநேரம் அதனை செயலாக்கும்’ என்று கூறினர்.  இதுகுறித்து ரயில்வே சிக்னல்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறையின் (பாலசோர்) மூத்தப் பொறியாளர் ஏ.கே. மஹந்தா கூறுகையில், ‘கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஓட்டுநர் சிக்னல் கொடுத்ததால்தான் விபத்து நேர்ந்தது என்று குழுவின் நான்கு உறுப்பினர்கள் கூறியதை, மற்றொரு மூத்த ரயில்வே பொறியாளர் மறுத்துள்ளார். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் லூப் லைனின் பாயிண்ட் எண்: 17ஏ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டேட்டாலாக்கர் அறிக்கையின் அடிப்படையில், ரயில் தடம் புரண்ட பிறகு அது தலைகீழாக மாறியிருக்கலாம்’ என்று கூறினார். அதேநேரம் குர்தா கோட்ட ரயில்வே மேலாளர் ரின்கேஷ் ராய் கூறுகையில், ‘ரயில் பாதை சரியாக இருந்தால் மட்டுமே கிரீன் சிக்னல் கிடைக்கும். பாதையில் சின்ன பிரச்னை இருந்தாலும் கூட, க்ரீன் சிக்னல் கிடைக்காது. யாரோ ஒருவர், உடல் ரீதியாக சிக்னலை மாற்றாமல் அது தானாக மாறாது. முதற்கட்ட விசாரணையில், பச்சை நிறத்தில் சிக்னல் இருந்ததாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் லோகோ பைலட், உதவி லோகோ பைலட் ஆகியோர் தங்களது வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்யும் டேட்டா லாக்கரும் கூட, பச்சை நிறத்தில் சிக்னல் இருந்ததைக் காட்டுகிறது.

பூர்வாங்க விசாரணைக்கு பின்னரே, விபத்துக்கான காரணம் தெரியவரும்’ என்றார். ரயில் விபத்தின் ஆரம்பகட்ட விசாரணையில், ‘சிக்னல் சிஸ்டத்தில்’ இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டாலும், மனித அலட்சியம் அல்லது சதி நடந்திருக்க வாய்ப்பு இருந்ததாக ஆதாரங்கள் குறிப்பிட்டன. அதாவது, சிக்னல் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ள ரிலே அறையின் கதவு திறந்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், லூப் லைனில் அந்த ரயில் செல்வதற்கான பச்சை நிற சிக்னல் எப்படி கிடைத்தது?

The post ரயில்வே கூட்டு விசாரணை குழு அறிக்கை தாக்கல்; சிக்னல் கோளாறால் ரயில் விபத்து ஏற்படவில்லை: 5 பேர் கொண்ட குழுவில் ஒரு பொறியாளர் மாறுபட்ட கருத்து appeared first on Dinakaran.

Tags : Joint Inquiry Committee of Railways ,New Delhi ,Railway Joint Investigation Committee ,Odisha ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு