×

பல்லடத்தில் 5 தலைமுறைகளை கண்ட 103 வயது மூதாட்டியிடம் ஆசி பெற்ற குடும்பத்தினர்

பல்லடம் : பல்லடத்தில் 5 தலைமுறைகளை கண்ட 103 வயது மூதாட்டியிடம், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்த குடும்ப உறவுகள் ஆசி பெற ஒன்றிணைந்த தலைமுறை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.பண்டைய கால கூட்டுக் குடும்பங்கள் என்ற அழகிய அமைப்பு இன்றைய நவீன காலத்தில் குறைந்து வரும் நிலையில் குடும்ப உறவுகள் என்ற வேர்களை தேடி செல்லும் முயற்சியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள வேலப்பகவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பம் வெற்றி கண்டுள்ளது.

பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டன்பாளையம் கிராமத்தை சேர்ந்த குமாரசாமி கவுண்டர்வேலாத்தாள் தம்பதியின் குடும்ப உறவுகள் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணைந்த தலைமுறை சங்கமம் என்ற நிகழ்ச்சி பல்லடத்தில் நேற்று நடைபெற்றது.குமாரசாமி கவுண்டர்-வேலாத்தாள் ஆகியோரின் மகள் தெய்வத்தாள், ஆறுச்சாமி சின்னச்சாமி, குமாரசாமி, கணபதிகவுண்டர் மற்றும் சின்னப்ப கவுண்டர் ஆகிய 6 பேரின் குடும்பங்கள் 5 தலைமுறைகளாக விரிவடைந்த நிலையில் பலரும் வேலை, தொழில், படிப்பு என பல்வேறு ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்றதால் 30 ஆண்டுகளாக சொந்தங்கள் இடையே தொடர்பு குறைந்து காணப்பட்டது. இதில் 4 பேர் மறைந்த நிலையில் 103 வயதான தெய்வத்தாள் மற்றும் அவரது தம்பி 85 வயதான ஆறுச்சாமி ஆகியோர் வாழ்ந்து வருகின்றனர்.

இக்குடும்பத்தினருக்கு 5 தலைமுறைகளை கண்ட 103 வயதுடைய தெய்வத்தாளுக்கு 3 மகன்கள் மற்றும் 4 மகள்கள், 17 பேரன் பேத்திகள், 35 கொள்ளு பேரன் பேத்திகள் உள்ளனர். தெய்வத்தாலின் குடும்பத்தினர் மற்றும் அவரது தம்பி குடும்பத்தினர் என மொத்தமாக நேரடி உறவினர்கள் 200 பேர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் சிங்கப்பூர், அமெரிக்கா என வெளிநாடுகளிலும் குடும்பத்தோடு வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் குடும்பத்தினர் களம் இறங்கினர்.

கடந்த 6 மாதங்களாக அனைவரையும் கண்டுபிடித்து தொடர் முயற்சியால் சேலம், ஈரோடு, திருச்சி, திருப்பூர் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சிங்கப்பூர், அமெரிக்கா என வெளிநாடுகளில் இருந்தும் பல்லடத்துக்கு வந்து தங்களது குடும்பத்தாரை சந்தித்து ஒருவருக்கொருவர் உறவுகளை புதுப்பித்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது மறைந்த பெரியோர்களின் புகைப்படத்தை வைத்து அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தங்களது தாத்தா, பாட்டி என அனைவரையும் அமர வைத்து அவர்களிடம் அறிமுகம் ஆகி ஆசி பெற்றும், குடும்பத்தோடு செல்பி படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.

The post பல்லடத்தில் 5 தலைமுறைகளை கண்ட 103 வயது மூதாட்டியிடம் ஆசி பெற்ற குடும்பத்தினர் appeared first on Dinakaran.

Tags : Palladam ,Malaysia ,America ,
× RELATED திருநங்கையை தாக்கியவர் கைது