×

குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொது மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலபோகம் பகுதியில் பல ஆண்டு காலமாக திருப்பாற்கடல் நீரேற்று மையம் செயல்பட்டு வருகிறது. இந்த பம்ப் ஹவுஸில் இருந்து காஞ்சிபுரம் நகர பகுதிகளுக்கு தினந்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பம்ப் ஹவுஸ் உள்ள பகுதியில் புதிதாக குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நேற்று பம்ப் ஹவுஸ் உள்ள பகுதியில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் திடீரென அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு சிவகாஞ்சி போலீசார் வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் பரபரப்பும் நிலவியது.

The post குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: காஞ்சிபுரம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Road ,Dinakaran ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...