சென்னை: சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, ஓய்வுபெற்றதை அடுத்து, அடுத்த இடத்தில் இருந்த துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரும் சில நாட்களில் ஓய்வுபெற்றதை அடுத்து அடுத்த பொறுப்பில் மூத்த நீதிபதியாக இருந்த டி.ராஜா சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் டி.ராஜா இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக இருக்கக்கூடிய வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
நாளை முதல் நீதிபதி வைத்தியநாதன் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், பள்ளி, சட்டப்படிப்பை சென்னையில் முடித்தார். 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் தொழிலை தொடங்கினார். 2013ல் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்ற அவர், 2015-ல் ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியானார். தற்போது, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
The post சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமனம்..!! appeared first on Dinakaran.