×

எமரால்டு அணையில் தண்ணீர் குறைந்தது போர்த்தியாடா விவசாயிகள் பாதிப்பு

ஊட்டி : ஊட்டி அருகேயுள்ள எமரால்டு அணையில் தண்ணீர் குறைந்துக் கொண்டே செல்வதால் போர்த்தியாடா பகுதியில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக பல்வேறு அணைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், எமரால்டு அணையும் ஒன்று. இந்த அணை நீர் கொண்டு குந்தா, கெத்தை, பரளி மற்றும் பில்லூர் நீர் மின் நிலையங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், இந்த நீர் எமரால்டில் இருந்த போர்த்தியாடா வரை சுமார் 5 கி.மீ., தூரம் பறந்து விரிந்து காணப்படும். இந்த அணை நீரை கொண்டு போர்த்தியாடா, இத்தலார் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோடை காலம் என்பதால், மின் தேவை அதிகரித்துள்ளது. இதற்காக நாள் தோறும் குந்தா வட்டாரத்திற்குட்பட்ட நீர் மின் நிலையங்கள் இயக்கப்படுகின்றன.

இதனால், அணையில் உள்ள தண்ணீர் குறைந்துக் கொண்டே செல்கிறது. தற்போது, அணையின் தண்ணீர் அளவு குறைந்த நிலையில், போர்த்தியாடா பகுதியில் அணை காய்ந்து போய் காட்சியளிக்கிறது. மேலும், சிறிய கால்வாயில் மட்டுமே தண்ணீர் செல்கிறது. இதனால், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயத்திற்காக இந்த அணை நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், மேலும், அணையின் கொள்ளளவு குறைய வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post எமரால்டு அணையில் தண்ணீர் குறைந்தது போர்த்தியாடா விவசாயிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Poortiyada ,Emerald Dam ,Ooty ,Porthiada ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...